முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் குறித்த புத்தகத்தை வெளியிட்டார் உள்துறை மந்திரி அமித்ஷா...!


முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் குறித்த புத்தகத்தை வெளியிட்டார் உள்துறை மந்திரி அமித்ஷா...!
x

ராமேசுவரத்தில் நடந்த நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி குறித்த புத்தகத்தை உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டார்.

ராமேசுவரம்,

'என் மண், என் மக்கள்-மோடியின் தமிழ் முழக்கம்' என்ற கோஷத்துடன் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநிலம் முழுவதும் நடைபயணம் தொடங்கியுள்ளார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் விளக்கும் வகையில் இந்த நடைபயணம் மேற்கொள்கிறார். மொத்தம் 168 நாட்கள் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொள்கிறார்.

இந்த நடைபயண தொடக்க விழா நேற்று மாலையில் ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரில் உள்ள திடலில் நடைபெற்றது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விழாவில் கலந்துகொண்டு அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கிவைத்தார்.

இதனை தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய இணை மந்திரி எல். முருகன், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இன்று காலை ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் குறித்த புத்தக வெளியீட்டு விழா ராமேசுவரத்தில் இன்று நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் உள்துறை மந்திரி அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் குறித்து எழுதப்பட்ட 'கலாம் நினைவுகள் இறப்பதில்லை' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story