ஜெயக்குமாருக்கு ரூ.20 கோடி வரை கடன்: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்


ஜெயக்குமாருக்கு ரூ.20 கோடி வரை கடன்: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 8 May 2024 1:23 PM GMT (Updated: 8 May 2024 1:26 PM GMT)

கட்சியில் பதவியை தக்கவைத்துக்கொள்ள கே.பி.கே.ஜெயக்குமார் பல லட்சம் ரூபாய் செலவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை,

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார். இவர் கடந்த 2-ம் தேதி இரவு 7.45 மணியளவில் கரைசுத்துபுதூரில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜெயக்குமாரின் மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த உவரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, மாயமான ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் கடந்த 4-ந்தேதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே, ஜெயக்குமாருக்கு கடன் கொடுக்க வேண்டிய விவரங்கள் அடங்கிய கடிதம் ஒன்று வெளியானது. இந்த நிலையில், இவர் சுமார் 20 கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு நபர்களிடம் கடன் பெற்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அரசு ஒப்பந்தம், கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒப்பந்தங்கள் எடுத்து பணியாற்றியுள்ளார். கட்சியில் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவரது தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் பல நபர்கள் இவரிடம் கொடுத்த கடனை திருப்பிகேட்டதாக கூறப்படுகிறது.ஆகையால் இவர் யார் யாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற பட்டியல் அவர் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயக்குமாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என கடிதத்தில் எழுதிய நபர்களிடம் நடத்திய விசாரணையில், ஜெயக்குமார்தான் தங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். வேண்டுமென்றே திட்டமிட்டு இது போன்று எழுதி வைத்திருக்கிறார் என பலர் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story