‘பயங்கரவாதத்தை ஒடுக்காவிட்டால் பொறுப்பேற்க வைப்போம்’ - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை


‘பயங்கரவாதத்தை ஒடுக்காவிட்டால் பொறுப்பேற்க வைப்போம்’ - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Oct 2018 11:00 PM GMT (Updated: 24 Oct 2018 7:36 PM GMT)

பயங்கரவாதத்தை ஒடுக்காவிட்டால் பொறுப்பேற்க வைப்போம் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாஷிங்டன்,

பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. பயங்கரவாதிகளை அந்த நாடு பாரபட்சமின்றி ஒடுக்குவதில்லை. இது குறித்து அமெரிக்கா, பல முறை சுட்டிக்காட்டியும், பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடும் அதிருப்தியில் உள்ளது.இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “பாகிஸ்தான் தனது மேற்கு எல்லையில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால், அவர்களை பொறுப்பேற்க வைப்போம். கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் சென்று, அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கானை சந்தித்துப் பேசியபோது, இதை தெளிவுபடுத்தினேன்” என்று குறிப்பிட்டார்.

“தெற்கு ஆசியாவுக்கும், மத்திய ஆசியாவுக்குமான அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பதையும் பாகிஸ்தான் பிரதமரிடம் தெளிவுபடுத்தி விட்டேன். மேற்கு எல்லையில் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளேன்” என்றும் மைக் பாம்பியோ கூறினார்.

மேலும், “எல்லா பயங்கரவாதிகளையும் பாரபட்சம் இல்லாத வகையில் ஒழித்துக்கட்ட பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரையில், அந்த நாட்டுக்கான நிதி உதவியை நிறுத்தி வைக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவில் மாற்றம் இல்லை” எனவும் மைக் பாம்பியோ கூறினார்.


Next Story