ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே கடும் மோதல்


ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே கடும் மோதல்
x
தினத்தந்தி 12 Aug 2019 11:00 PM GMT (Updated: 12 Aug 2019 8:36 PM GMT)

ஹாங்காங்கில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

ஹாங்காங்,

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் 10 வாரத்தை எட்டி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை விக்டோரியா பூங்காவில் அமைதி பேரணி நடத்த போராட்டக்காரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பங்கேற்றனர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாரின் தடையை மீறி அங்கிருந்து வெளியேறி முக்கிய சாலையில் படையெடுத்தனர்.

இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டு, போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். அதே சமயம் போராட்டக்காரர்கள் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசி எறிந்தனர்.

இதனால் அந்த பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. அதே போல் ஹாங்காங்கின் மத்திய மாவட்டங்களிலும் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பயங்கர மோதல்கள் அரங்கேறின. மேலும் ரெயில் நிலையங்களில் திரண்டிருந்த போராட்டக்காரர்களை போலீசார் சுற்றிவளைத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, தடியடியும் நடத்தினர்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மேலும், போலீசார் சிலர் போராட்டக்காரர்களை போல் வேடமணிந்து கூட்டத்துக்குள் நுழைந்து போராட்டக்காரர்களை கைது செய்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது.

Next Story