காஷ்மீர் விவகாரம்: பிரான்ஸின் உதவியை நாடிய பாகிஸ்தான்


காஷ்மீர் விவகாரம்: பிரான்ஸின் உதவியை நாடிய பாகிஸ்தான்
x
தினத்தந்தி 21 Aug 2019 3:26 AM GMT (Updated: 21 Aug 2019 3:26 AM GMT)

காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர், பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சரிடம் தொலைபேசியில் உரையாடினார்.

இஸ்லாமாபாத்,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசாங்கம் ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடனான தனது தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்ட பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் கவனத்தை திருப்ப முயன்றது.

இதனையடுத்து சீனாவின் உதவியோடு காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா பாதுகாப்பு சபையிடம் பாகிஸ்தான் அரசாங்கம் முறையிட்டது. ஆனால் ஐ.நா பாதுகாப்பு சபையின் நான்கு நிரந்தர உறுப்பு நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்காததால் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான பிரான்ஸின் உதவியை நாடும் விதமாக பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சர் ஜீன் யேவ்ஸ் லெட்ரியனிடம் தொலைபேசியில் உரையாடினார். 

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைபேசி உரையாடலின் போது, சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறி இந்திய அரசாங்கம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததையும், இதனால் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதையும் பாகிஸ்தான் தரப்பில் எடுத்துரைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லெட்ரியன், இரு நாடுகளையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும், இந்த விவகாரம் தீவிரமடையாமல் இருப்பதை இரு நாடுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story