துருக்கியில் பயங்கர நில நடுக்கம்: கட்டிடங்கள் தரை மட்டம்; 22 பேர் இடிபாடுகளில் சிக்கி பலி


துருக்கியில் பயங்கர நில நடுக்கம்: கட்டிடங்கள் தரை மட்டம்; 22 பேர் இடிபாடுகளில் சிக்கி பலி
x
தினத்தந்தி 25 Jan 2020 9:30 PM GMT (Updated: 25 Jan 2020 9:30 PM GMT)

துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 22 பேர் பலியாகினர்.

இலாஜிக்,

துருக்கி நாடு, புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால், அவ்வப்போது நில நடுக்கம் ஏற்பட்டு பெருத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. அங்கு 1999-ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது வரலாற்று சோகமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், அங்குள்ள இலாஜிக் மாகாணத்தில் சிவ்ரிஸ் என்ற சிறிய நகரத்தை மையமாக வைத்து நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 8.55 மணிக்கு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானது.

இந்த நில நடுக்கத்தால் தியார் பக்கிர், சான்லியர்பா, அடியமான் உள்ளிட்ட பல நகரங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின.

வீடுகளிலும், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களிலும் இருந்து பொதுமக்கள் பதறியடித்துக்கொண்டு, வெளியே ஓடி வந்து வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர். இதை உள்ளூர் டெலிவிஷன் காட்சிகள் படம் பிடித்து காட்டின.

தெற்கு அடானா, வடக்கு சாம்சன் மாகாணங்களிலும் இந்த நில நடுக்கம் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

நில நடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதையொட்டி அந்த நாட்டின் அதிபர் தாயீப் எர்டோகன் கூறுகையில், “இந்த துயரமான தருணத்தில் மக்களோடு, மக்களாக இணைந்து நிற்கிறோம். மிகுந்த பீதியை ஏற் படுத்தியுள்ள நிலையில், நில நடுக்கம் பாதித்த பகுதிகளில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன” என கூறினார்.

இந்த நில நடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 22 பேர் பலியானதாகவும், 1,015 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

மீட்பு பணி பற்றி அந்த நாட்டின் உள்துறை மந்திரி சுலைமான் சொய்லு கூறும்போது, “மலாட்யா நகரில் இடிபாடுகளுக்குள் யாரும் சிக்கவில்லை. இலாஜிக் நகரில் இடிபாடுகளில் தேடுதல் பணி நடக்கிறது. அங்கு 30 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

இலாஜிக்கில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. அங்கு இடிபாடுகளில் இருந்து ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து, 274 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உறைந்தனர்.

ராணுவ மந்திரி ஹலுசி அகார் கூறும்போது, தேவைப்பட்டால் ராணுவம் மீட்பு பணியில் இறங்க தயாராக உள்ளது என தெரிவித்தார்.

நில நடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான மீட்பு, தேடல் குழுக்கள் விரைந்துள்ளன.


Next Story