2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற இரண்டு மனித உடல்கள் கண்டுபிடிப்பு


2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற இரண்டு மனித உடல்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2020 6:12 AM GMT (Updated: 22 Nov 2020 6:12 AM GMT)

ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற இரண்டு மனித உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இத்தாலி,

ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் பேரரசின் பாம்பீ நகரத்தை அழித்த, எரிமலைச் சீற்றத்தில் இறந்த, இரண்டு மனிதர்களின் உடல்களை இத்தாலியிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்கள் எரிமலை வெடித்துச் சிதறியபோது தஞ்சமடைய இடம் தேடி இருக்கலாம். அப்போது, எரிமலைக் குழம்பால் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என பாம்பீ தொல்பொருள் பூங்காவின் இயக்குநர் மாசிமோ ஒசன்னா கூறுகிறார்.

கி.பி 79-ல் வெசுவியஸ் என்ற எரிமலையின் சீற்றத்தால் மொத்த பாம்பீ நகரமும் மூழ்கியது. இந்த எரிமலைச் சீற்றம் பாம்பீ நகரத்தையும் அங்கு குடியிருந்தவர்களையும் சாம்பலில் புதைத்துவிட்டது. தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இடம், ஆய்வு செய்வதற்கான ஒரு வளமான ஆதாரமாக மாறி இருக்கிறது.

இந்த மாதம், பண்டைய பாம்பீ நகரத்தின் புறநகரில் ஒரு பெரிய மாளிகை போன்றதொரு வீட்டை அகழ்வாராய்ச்சி செய்த போதுதான், இந்த இரண்டு எச்சங்களையும் கண்டெடுத்துள்ளனர். புதைந்துபோன அந்தச் செல்வந்தர் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது கழுத்துக்கு கீழே கம்பளி ஆடையின் தடயங்கள் காணப்பட்டன. 

மற்றொரு மனிதரின் வயது 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டதாக இருக்கலாம் என்று தொல்பொருள் தள அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்துபோன மனிதர்களின் உடல்கள் இறுக்கப்பட்ட சாம்பலின் மீது உண்டாக்கிய அச்சைப் பயன்படுத்தி, அவற்றின் வார்ப்புகள் செய்யப்பட்டன.





 



இது வெப்ப அதிர்ச்சியால் ஏற்பட்ட மரணம். அதை, இறுகி இருக்கும் அவர்களின் கால்களும், கைகளும் நிரூபிக்கின்றன என்றும் எரிமலைச் சீற்றம் நடந்ததற்கான, மலைக்க வைக்கக்கூடிய மற்றும் அசாதாரணமான சாட்சியம் இது என்றும் ஒசன்னா செய்தியாளர்களிடம் கூறினார்.

நேபிள்ஸ் என்கிற இடத்துக்கு அருகில் உள்ள அகழ்வாராய்ச்சி தளத்தில், தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

Next Story