கொரோனா இறுதிச்சடங்குக்கு அதிக கட்டணம்; தென்ஆப்பிரிக்காவில் புரோகிதர்கள் மீது குற்றச்சாட்டு


கொரோனா இறுதிச்சடங்குக்கு அதிக கட்டணம்; தென்ஆப்பிரிக்காவில் புரோகிதர்கள் மீது குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 Jan 2021 3:33 PM GMT (Updated: 24 Jan 2021 3:33 PM GMT)

தென்ஆப்பிரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச்சடங்குக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என புரோகிதர்கள் மீது இந்து அமைப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்காவில் கொரோனா 2-வது அலை மற்றும் உருமாறிய புதிய வகை கொரோனா என, நோய்த்தொற்று வீரியமாக உள்ளது. அங்கு கடந்த வியாழக்கிழமை மட்டுமே 11 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டு, 647 பேர் உயிரிழந்திருந்தனர்.

இவ்வாறு தினமும் அதிக எண்ணிக்கையில் கொரோனா மரணங்கள் நிகழ்வதால் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் ஓய்வின்றி நடைபெற்று வருகிறது. இதை பயன்படுத்தி இந்து புரோகிதர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக இந்து அமைப்பு ஒன்று குற்றம் சாட்டி உள்ளது.

குறிப்பாக ஜோகன்னஸ்பர்க் உள்ளிட்ட நகரங்களில் அதிகமான இந்துக்கள் வசித்து வருகின்றனர். இதில் கொரோனாவால் உயிரிழப்போருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு 79 டாலரில் இருந்து 131 டாலர் வரை (சுமார் ரூ.9,500 வரை) வசூலிப்பதாக இந்து தர்ம அமைப்பின் உறுப்பினரான பிரதீப் ராம்லால் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இது சரியல்ல. நமது கலாசாரப்படி இதை ஒரு சேவையாக செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஏதாவது நன்கொடையாக கொடுத்தால் மட்டுமே புரோகிதர் பெற்றுக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு புரோகிதர்களே இவ்வாறு அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது’ என்று தெரிவித்தார்.

இந்த பிரச்சினையை தவிர்க்க ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மந்திரங்கள் அடங்கிய வீடியோக்களை பயன்படுத்தவோ அல்லது காணொலி காட்சி மூலமோ புரோகிதர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அவர் யோசனை தெரிவித்தார்.


Next Story