மியான்மர்: அப்பாவி மக்கள் 30 பேரை சுட்டுக்கொன்று பெட்ரோலை ஊற்றி எரித்த கொடூரம்


மியான்மர்: அப்பாவி மக்கள் 30 பேரை சுட்டுக்கொன்று பெட்ரோலை ஊற்றி எரித்த கொடூரம்
x
தினத்தந்தி 26 Dec 2021 2:28 AM GMT (Updated: 26 Dec 2021 2:28 AM GMT)

மியான்மரில் அப்பாவி மக்கள் 30 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் அந்த உடல்களை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

நேபிடாவ், 

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதியில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது தொடங்கி இதுவரையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 1,500-க்கும் மேற்பட்டோரை ராணுவம் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றுள்ளது.

இந்த சூழலில் சமீப காலமாக ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களை ராணுவம் கைது செய்து சித்ரவதை செய்து கொலை செய்வதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் மியான்மரின் கிழக்கு பகுதியில் கயா மாகாணத்தில் உள்ள மோ சோ கிராமத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 30 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்று அவர்களின் உடல்களை தீ வைத்து எரித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் இது குறித்து கூறியதாவது:-

மோ சோ கிராமத்தை சேர்ந்த மக்கள் ராணுவத்துக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையிலான ஆயுத மோதலில் இருந்து தப்பிக்க மேற்கு பகுதியில் உள்ள அகதிகள் முகாமை நோக்கி சென்றபோது, ராணுவ வீரர்களை கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் கைது செய்த 30 பேரின் கை, கால்களை கட்டி சுட்டுக்கொன்றனர். அதனை தொடர்ந்து அவர்களின் உடல்களில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story