6. ஆச்சரியங்கள் நிகழ்த்திய அரிய நவமணிகள்


6. ஆச்சரியங்கள் நிகழ்த்திய அரிய நவமணிகள்
x
தினத்தந்தி 1 Aug 2017 1:45 AM GMT (Updated: 31 July 2017 12:45 PM GMT)

நவரத்தினங்கள் பூமிக்கு அடியிலும், கடலுக்கு அடியிலும் பல சிரமங்களுக்கு இடையில் கண்டு பிடிக்கப்படுகின்றன.

சூரியனுக்கு உரிய ‘ரூபி’ எனப்படும் மாணிக் கம், சந்திரனுக்கு உரிய ‘பேர்ல்’ எனப்படும் முத்து, செவ்வாய்க்கு உரிய ‘கோரல்’ எனப்படும் பவளம், புதனுக்கு உரிய ‘எமரால்டு’ எனப்படும் மரகதம், குருவுக்கு உரிய ‘எல்லோ சபையர்’ எனப்படும் புஷ்பராகம், சுக்ரனுக்கு உரிய ‘டைமண்ட்’ எனப்படும் வைரம், சனிக்கு உரிய ’புளூ சபையர்’ எனப்படும் நீலக்கல், ராகுக்கு உரிய ‘ஹெஸோனைட்’ எனப்படும் கோமேதகம் மற்றும் கேதுவுக்கு உரிய ‘கேட்ஸ் ஐ’ எனப்படும் ‘வைடூரியம்’. இவையாவும் நவ ரத்தினங்கள் என்று அழைக்கப்படுகின்றன. விலை மதிப்பு மிக்க இந்த கற்களைப் பற்றி பலரும் அறிந்திருப்போம்.

நவரத்தினங்கள் பூமிக்கு அடியிலும், கடலுக்கு அடியிலும் பல சிரமங்களுக்கு இடையில் கண்டு பிடிக்கப்படுகின்றன. அதன் காரணமாக அவற்றின் மதிப்பும் அதிகமாக இருக்கும். அந்த நவரத்தினங் களின் வரிசையில் மேலும் பலவிதமான மணிகள் இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. அத்தகைய மணி வகைகள் பல்வேறு உயிரினங் களின் உடலில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இயற்கையாகவே உருவாகின்றன. ரகசியமான தந்திரா முறையிலான பூஜைகளை கடைப்பிடிப்பவர்கள் அவற்றை மிகவும் ரகசியமாகவே பல காலங்களாக பயன்படுத்தி வந்திருக் கிறார் கள். பல்வேறு வகைகளாக இருக்கும் அவற்றில் மிக முக்கியமான வகைகளாக ஒன்பது மணிகள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை சங்குமணி, நாகமணி, வராகமணி, கஜமணி, மூங்கில்மணி, திமிங்கலமணி, மச்சமணி, ஆணிமுத்து மற்றும் மேகமணி ஆகியவையாகும். அவற்றை பற்றிய சுவையான தகவல்களை இங்கே காணலாம்.

சங்கு மணி

ஆழ்கடலில் வசிக்கும் சங்கு குடும்பத்தைச் சேர்ந்த உயிரினங்களின் வயிற்றில் இவ்வகை மணிகள் உருவாகின்றன. அவை வழக்கமான வெள்ளை நிறத்தில் இல்லாமல் மென்சிவப்பு, மஞ்சள் மற்றும் அடர் சிவப்பு போன்ற பல்வேறு நிறங்களில் இருக் கின்றன. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உட்படாமல் வெவ்வேறு விதங்களாக காணப்படுகின்றன. முக்கியமாக இரண்டு சங்கு முத்துகள், ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகை மணிகள் வாழ்க்கையில் பல்வேறு வகைகளில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது. சங்கு மணிகளில், கனகச்சிதமான வட்ட வடிவம் கிடைப்பது மிகவும் அரிதானதாம். இதுவரையில் 2 காரட்டுகளுக்கும் மேல் எடைகொண்ட சங்கு மணி கிடைக்கவில்லை என்கிறார்கள்.

கருட புராணத்தின் 69–வது பகுதியில் இத்தகைய சங்கு மணிகள் பற்றிய தகவல்கள் காண கிடைக்கின்றன. புகழ்பெற்ற ஜோதிட அறிஞர் வராஹமிகிரருடைய நூலான ‘பிருஹத் சம்ஹிதையில்’, ‘உயர்ந்த மதிப்புடைய சங்குமணியானது வட்ட வடிவத்திலும், நல்ல ஒளியுடன் கூடியதாகவும், சந்திரனை போன்று பிரகாசமாகவும் இருக்கும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வராக மணி

இது அனைவருக்கும் புதியதாகத்தான் இருக்கும். காரணம் ‘வராகம்’ எனப்படும் பன்றியின் உடலில் இருந்து மணிகள் கிடைக்கும் என்பது பலருக்கும் ஆச்சரியமான ஒன்றுதான். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் முக்கியமானது ‘வராக அவதாரம்’. அந்த அவதாரத்தில், ஆழ்கடலில் மூழ்கிய பூமியை, தனது கோரை பற்களால் தாங்கியபடி மேலே கொண்டு வந்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன.

கருட புராணத்தின் 69–வது பகுதியிலும், பிருஹத் சம்ஹிதையின் 51–வது பகுதியிலும் வராக மணி பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. வராக மணியானது அடர்ந்த நிறத்திலும், ‘மார்பிள்’ போன்ற தோற்றத்துடனும், ஒளி ஊடுருவக் கூடிய தன்மை சற்று குறைந்ததாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. வராகத்தின் கோரைப்பற்கள் தொடங்கும் இடத்திற்கு சற்று மேற்புறத்தில் அந்த மணிகள் உருவாவதாகவும், விலை மதிப்பு இல்லாததாகவும் கருதப்படுகிறது.

வராக மணியை வைத்திருப்பவர்களுக்கு பூமி சம்பந்தமான அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும் என்றும், பூமியை ஆட்சி செய்யும் வல்லமை தருவதாகவும் பழைய நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. பதவி சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அவற்றை பெற உதவி செய்வதில் இந்த வராக மணி இன்றியமையாததாம்.

ஆணி முத்து

நல் முத்து எனப்படும் ஆணி முத்துகள், தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவை ஆற்று நீர் முத்து, கடல் நீர் முத்து என்று இரு வகையாக உள்ளன. வெண்மை நிறத்துடன் ஒளி பொருந்திய உருண்டை வடிவத்தில் சிப்பிக்குள் உருவாவது முத்தாகும். சிப்பியிலிருந்து முத்து கிடைக்கிறது என்றாலும், சிப்பி போன்றே இருக்கும் ‘மசில்’ எனப்படும் இன்னொரு வகை பிராணியிலும், ஒரு வகை திரவம் சுரந்து முத்தாக மாறுகிறது. ஆனால், ஒரு சிப்பி மூலம் ஒரு சமயத்தில் ஒரு முத்துதான் கிடைக்கும்.

சிப்பியில் உருவாகும் முத்துகளில் உருண்டை வடிவமுள்ள முத்துகளே சிறப்பானவை. அவற்றில் உயர்ந்த வகைகளை ‘ஆணிமுத்து’ என்று சொல்வார்கள். ஆணி முத்து என்பது அளவில் பெரியதாகவும், மிகுந்த அழுத்தம் உடையதாகவும், ஒளிரும் தன்மையுடனும், பளபளப்பாகவும் இருக்கும். பொதுவாக மணி, துளி என்ற பெயர்களில் அவற்றின் வடிவ அமைப்பை கொண்டு முத்துகள் அழைக்கப்படும்.

உலகில் பட்டை தீட்ட வேண்டிய அவசியம் இல்லாத ஒரு ரத்தினம் முத்து ஆகும். இயற்கையிலேயே நல்ல பொலிவுடனும், வடிவுடனும் கிடைப்பது முத்து மட்டுமே. உடலுக்கு குளிர்ச்சியையும், மனதில் தெளிவையும், பெண்களுடன் சண்டை சச்சரவுகளை தவிர்க்கக் கூடியதாகவும் முத்தின் பலன்கள் இருக்கின்றன. ஆனால் அவை இயற்கை முத்துகளுக்குத்தான் பொருந்தும்.'

மச்ச மணி

நடுக்கடலில் வாழக்கூடிய சில அரிய வகை மீன்களிடமிருந்து கிடைக்கும் மணிகள் வெவ்வேறு வடிவங்களிலும், ஒளி ஊடுருவும் வகையிலும், பளிங்கு போன்ற தோற்றத்திலும் இருக்கின்றன. விலை மதிப்பற்றதாக கருதப்படும் அவை, இளஞ்சிவப்பு, மஞ்சள் கலந்த வெண்மை, இளம் பச்சை என்று பல வண்ணங்களிலும் உள்ளன.

‘மச்ச மணியானது வட்ட வடிவத்திலும், ஒளி பொருந்திய பல்வேறு வண்ணங்களிலும், ஆழ்கடலில் வசிக்கும் மீன்களின் வாயில் இருந்தும் பெறப்படுகிறது’ என்கிறது கருடபுராணம். செல்வ வளங்களை தரும் மகாலட்சுமியின் அருளை பெறக்கூடிய தகுதியை ‘மச்ச மணிகள்’ தருவதாக நம்பிக்கை உள்ளது.

தண்ணீரில் வசிக்கும் மீனின் வாயில் இருந்து பெறப்படுவதால், வருண பகவானின் அருளையும் இவ்வகை மணிகள் பெற்று தருவதாக கருதப்படுகிறது. நீர் வளம் பொருந்திய நில புலன்களை அடையக்கூடிய தகுதியை ஒருவர் பெற வேண்டுமானால், இந்த மணியை அணிய வேண்டும் என்று நம்பிக்கை பழைய காலத்திலிருந்து இருக்கிறது.

மீதமுள்ள நவமணிகளை அடுத்த வாரம் பார்ப்போம்...

Next Story