சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா ஆடல் வல்லானே...!, நடராஜ பெருமானே...! கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்


சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா ஆடல் வல்லானே...!, நடராஜ பெருமானே...! கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 23 Dec 2018 11:30 PM GMT (Updated: 24 Dec 2018 12:30 AM GMT)

சிதம்பரத்தில் ஆடல் அரசன் நடராஜரின் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆடல் வல்லானே...!, நடராஜ பெருமானே...! என்கிற கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் சிவபெருமானின் பஞ்சசபையில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 6 மகா அபிஷேகம் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அன்றைய தினங்களில் மூலவரே உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பாகும்.

மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் மூலவர் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். இதை காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தினமும் சாமி வீதிஉலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆருத்ரா தரிசனம் தருவதற்காக மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளினர். தேரோட்டத்தின் போது மழை பெய்த போதிலும், பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டம் முடிந்த பின் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சாமிகள் ஊர்வலமாக வந்து ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். அங்கு இரவு 8 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது.

தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணி முதல் தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது.

பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம் 1.25 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 2.55 மணி அளவில் கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

இதையடுத்து மாலை 4 மணி அளவில் மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம், பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர். அதில் பல்லக்கில் ஆடல் அரசன் நடராஜர் நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி தரிசனம் அளித்த கண்கொள்ளா காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

அந்த சமயத்தில் சிதம்பரம் நகரில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையையும் பொருட்படுத்தாமல், அங்கு திரண்டிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மழையில் நனைந்தபடியே ஆடல் வல்லானே...!, நடராஜ பெருமானே...! சிவ, சிவ.. ஓம் நமச்சிவாய என்று விண்ணை முட்டும் வகையில் பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசித்தனர். இதையடுத்து மாலை 4.15 மணி அளவில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

வழக்கமாக தரிசனம் மதியம் நேரத்திலே நடந்து முடிந்துவிடும். அதே போல் இந்த முறையும் 2 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தாமதமாக மாலை 4.15 மணி அளவில் தான் நடராஜரின் தரிசனத்தை பக்தர்கள் பெற முடிந்தது.

பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விழாவில் இன்று (திங்கட் கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சியும், நாளை(செவ்வாய்க்கிழமை) ஞானபிரகாசம் குளக்கரையில் தெப்ப உற்சவமும் நடக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா நிறைவு பெறுகிறது.

Next Story