சதம் விளாசிய கோலி, ராகுல்...மனமார புகழ்ந்து தள்ளிய கிரிக்கெட் ஜாம்பவான்


சதம் விளாசிய கோலி, ராகுல்...மனமார புகழ்ந்து தள்ளிய கிரிக்கெட் ஜாம்பவான்
x

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ராகுல் மற்றும் விராட் கோலி சதம் அடித்தனர்.

மும்பை,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகின்றன. சூப்பர்4 சுற்றுக்கு தகுதி கண்டுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் பாதியில் நின்று போன ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்தது. கோலி 122 ரன்கள், ராகுல் 111 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதையடுத்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்களில் அடங்கியது. ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா காயத்தால் பேட் செய்யவில்லை. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் சதமடித்த கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி இருவரையும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் பாராட்டியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில்,

விராட் மற்றும் கே.எல். அவர்களின் 100 ரன்களுக்கு வாழ்த்துகள்.

இந்திய அணிக்கு ஒரு பெரிய சாதகமான அறிகுறி என்னவென்றால், எங்கள் சிறந்த 6 பேட்டர்கள் - ரோகித், சுப்மன், விராட், கே.எல்., இஷான் மற்றும் ஹர்திக் ஆகியோர் 2 போட்டிகளில் வெவ்வெறு சூழ்நிலைகளில் ரன்களை எடுத்துள்ளனர்.

நன்றாக விளையாடினீர்கள்! அவ்வாறே தொடருங்கள்! என பாராட்டி பதிவிட்டுள்ளார்.


Next Story