ஓடும் ஆட்டோவில் பள்ளி மாணவியிடம் கானா பாடகர் சில்மிஷம் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

கானா பாடகர் உட்பட இரண்டு பேர் பாலியல் சில்மிஷம் செய்ததால் ஓடும் ஆட்டோவில் இருந்து மாணவி குதித்திருக்கிறார்.

Update: 2022-08-11 05:27 GMT

சென்னை,

சென்னையில் பொது வண்ணாரப்பேட்டை பகுதியை பேட்டை சேர்ந்த அந்த 14 வயது மாணவி தண்டையார்பேட்டையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த எட்டாம் தேதி அன்று இந்த மாணவி வழக்கம் போல் பள்ளி செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் ஏறி இருக்கிறார். அந்த ஷேர் ஆட்டோவில் ஏற்கனவே இரண்டு பேர் இருந்திருக்கிறார்கள்.

ஆட்டோ புது வண்ணாரப்பேட்டை நெருங்கிய போது அந்த இரண்டு பேரும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். கானா பாடகர் டோலக் ஜெகன் பாட்டு பாடி கொண்டு செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டு ஆட்டோவில் வந்து இருக்கிறார். அந்த மாணவியின் மீது கை பட்டதால் திடீரென்று அதிர்ச்சி அடைந்த அவர் தன்னை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய திட்டமிடுகிறார்கள் என்று பயந்து ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்திருக்கிறார்.

இதனால் மாணவியின் மூக்கு, தாடை ,இரண்டு கைகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. உடனே ஆட்டோவை நிறுத்தியிருக்கிறார் ஆட்டோக்காரர். ஆட்டோ நின்றதுமே அந்த இரண்டு பேரும் தப்பியோடி இருக்கிறார்கள்.

மாணவியை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தகவல் அறிந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்ததில் தப்பிய அந்த இரண்டு பேரும் கானா பாடகர் டோலக் ஜெகன், கொருக்குப்பேட்டை சேர்ந்த மணி என்பது தெரிய வந்திருக்கிறது. இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்