என்னை கடத்தியவனும், நானும் நண்பர்கள் என்று கூறுவதா? நடிகை பாவனா

என்னை கடத்திய குற்றவாளியும், நானும் நண்பர்களாக இருந்தவர்கள் என்று கூறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகை பாவனா கூறினார்.

Update: 2017-06-27 23:30 GMT

திருவனந்தபுரம்,

என்னை கடத்திய குற்றவாளியும், நானும் நண்பர்களாக இருந்தவர்கள் என்று கூறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகை பாவனா கூறினார்.

சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான் உள்பட தமிழ் மற்றும் ஏராளமான மலையாளப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பாவனா. இவர், கடந்த பிப்ரவரி 17–ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் கடத்திச் செல்லப்பட்டு, மானபங்கம் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக, பல்சர் சுனில் என்பவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில், பிரபல மலையாள கதாநாயகன் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதை அவர் மறுத்தார்.

அதே சமயத்தில், பல்சர் சுனிலின் நண்பர் ஒருவர், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக போலீசில் நடிகர் திலீப் புகார் செய்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமைதி காத்து வந்த நடிகை பாவனா, நேற்று பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

விசாரணையை பாதிக்கும் என்று போலீசார் கூறியதால்தான், நான் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்தேன். ஆனால், ஒரு நடிகர் தெரிவித்த கருத்து வேதனை அளித்ததால், பேச வேண்டியதாகி விட்டது.

என்னை கடத்திய பல்சர் சுனிலும், நானும் ஏற்கனவே நண்பர்களாக இருந்தவர்கள் என்றும், எனவே, நண்பரை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் அந்த நடிகர் கூறி இருக்கிறார். இக்கருத்து என்னை வேதனைப்படுத்தி உள்ளது.

இதுபோன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் மீது நான் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக உள்ளேன்.

இந்த வழக்கில் மேலும் பலரின் பெயர்கள் வெளியாகி உள்ளன. அதை ஊடகங்கள் மூலமே அறிந்தேன். அவர்கள் குற்றவாளியா? நிரபராதியா? என்று நிரூபிக்க என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. அதுபோல், யாரையும் காப்பாற்றும்படியோ, தண்டிக்கும்படியோ நான் போலீசிடம் சொன்னது இல்லை.

வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறது. போலீஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு பாவனா கூறியுள்ளார்.

இதற்கிடையே, ‘மலையாள சினிமாவில் பெண்கள்’ என்ற அமைப்பு, நடிகை பாவனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்