“திருமணத்துக்கு பிறகு மீண்டும் நடிக்கிறேன்” நடிகை சமந்தா பேட்டி

“கணவர் வீட்டில் எதிர்க்காததால் திருமணத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறேன்” என்று நடிகை சமந்தா பதில் அளித்தார்.

Update: 2017-10-17 22:00 GMT
ஐதராபாத்,

நடிகை சமந்தா ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

“எனது திருமணத்தை 100 பேர் அல்லது 200 பேரை அழைத்து எளிமையாக நடத்த வேண்டும் என்று விரும்பினேன். நான் எதிர்பார்த்தபடியே அது நடந்தது. இந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது.

தற்போது எனது பெயரை சமந்தா அக்கினேனி என்று மாற்றிக்கொண்டேன். அக்கினேனி என்பது நாக சைதன்யாவின் குடும்பத்து பெயர். திருமண மேடையில் எனக்கு நாக சைதன்யா தாலி கட்டியபோது அழுததை பற்றி பலரும் கேட்கிறார்கள்.

பணம் இல்லை

நான் சினிமாவில் நடிக்க வந்தபோது பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். படங்கள் ஓடிய பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. பணமும் சேர்ந்தது. சில தவறுகள் செய்து இருக்கிறேன். பிறகு அதை சரிசெய்து விட்டேன். மற்றவர்களுக்கு உதவி இருக்கிறேன். இவையெல்லாமே நாக சைதன்யாவுக்கு தெரியும்.

இப்படி என் வாழ்க்கையை முழுமையாக தெரிந்த ஒருவர் கணவராக அமைந்ததை நினைத்துத்தான் மணமேடையில் அழுதேன். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகாமல் ஏன் மீண்டும் நடிக்கிறேன் என்று பலரும் கேள்வி எழுப்பலாம். திருமணத்துக்கு பிறகு நடிக்க கூடாது என்று கணவர் குடும்பத்தில் யாரும் வற்புறுத்தவில்லை.

சுசி லீக்ஸ்

தொடர்ந்து நடிக்கும்படி சுதந்திரம் கொடுத்து இருக்கிறார்கள். திருமணமான நடிகைகளாலும் நன்றாக நடித்து மார்க்கெட்டை தக்க வைக்க முடியும் என்று நிரூபிப்பேன். கவர்ச்சியாக இல்லாமல் கவுரவமான வேடங்களில் நடிப்பேன். இடைக்காலத்தில் நான் பார்த்த மிக கேவலமான விஷயம் சுசி லீக்ஸ். என்னை அது மிகவும் பாதித்தது. மனிதர்களின் இன்னொரு முகத்தை தோலுரித்து காட்டியது.

சமூக வலைத்தளங்களில் இவ்வளவு அழுக்கு இருக்கிறதா? என்று தோன்றியது. சுசிலீக்ஸ் சம்பவத்துக்கு பிறகு எனக்கு பயம் ஏற்பட்டு டுவிட்டர் செயல்பாட்டை குறைத்துக்கொண்டேன். என் தோழிகள் பலர் அதில் இருந்து விலகி விட்டார்கள்.”

இவ்வாறு சமந்தா கூறினார்.

மேலும் செய்திகள்