“மாமிசம் போல் என்னை வியாபாரம் செய்ய திட்டமிட்டனர்” அமலாபால்

“மாமிசம் போல் என்னை வியாபாரம் செய்ய திட்டமிட்டனர்” அமலாபால் டுவிட்டரில் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2018-02-11 23:45 GMT
சென்னை,

நடிகை அமலாபால் மலேசிய கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அழகேசன் என்ற தொழில் அதிபர் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது அமலாபால் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் செய்தார்.

மலேசியாவில் உள்ள தொழில் அதிபர் கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்ளும்படி அந்த நபர் தொந்தரவு கொடுத்ததாக கூறப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகேசனை கைது செய்தனர். பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது அமலாபால் தைரியமாக புகார் அளித்ததாக அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இதற்கு நன்றி தெரிவித்து அமலாபால் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

“எனக்கு நேர்ந்த பிரச்சினையில் நடிகர் விஷால் ஆதரவாகவும் பக்கபலமாகவும் நின்றதற்கு நன்றி. ஒவ்வொரு பெண்ணும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்பது அவர்கள் கடமையாகும். என்னை மாமிச துண்டு போன்று வியாபாரம் செய்ய அந்த நபர் முயன்றார். அவருடையை நடவடிக்கை எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.”
இவ்வாறு அமலாபால் டுவிட்டரில் கூறியுள்ளார்.

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி உள்பட பல நடிகைகள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினார்கள். அதற்காக சமூக வலைத்தளத்தில் நானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன் என்ற அர்த்தத்தில் ‘மீ டூ’ என்ற ‘ஹேஷ்டேக்’ தொடங்கப்பட்டது. அதில் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பதிவிட்டு வருகிறார்கள். அமலாபாலும் அதில் பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் செய்திகள்