திகில் படத்தில் துப்பறியும் அதிகாரியாக சேரன்!

சில வருட இடைவெளிக்குப்பின், இயக்குனரும் நடிகருமான சேரன் திகில் படத்தில் துப்பறியும் அதிகாரியாக நடிக்கிறார்.

Update: 2018-02-19 23:15 GMT
பாரதி கண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து ஆகிய படங்களை இயக்கி நடித்த டைரக்டர் சேரன், ‘ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை’ படத்துக்குப்பின், நடிப்பில் இருந்து கொஞ்சம் விலகியிருந்தார். புதிய படங்களை இயக்கவும் இல்லை. சில வருட இடைவெளிக்குப்பின், அவர் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

ஜெயம் ரவி–ஸ்ரேயா நடித்த ‘மழை’ படத்தின் டைரக்டர் ராஜ்குமார் இயக்கும் புதிய படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் சேரன் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சிறிய இடைவெளிக்குப்பின், மீண்டும் நடிப்பது பற்றி சேரன் கூறியதாவது:–

‘‘நான் மறுபிரவேசம் செய்யும் படத்தில் சிறந்த கதையம்சமும், கதாபாத்திரமும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக நான் காத்திருந்தேன். ராஜ்குமார் சொன்ன கதை எனக்கு பிடித்து இருந்தது. கதாபாத்திரம் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதினேன். இந்த கதாபாத்திரம் மூலம் மறுபிரவேசம் செய்ய முடிவு செய்தேன்.

சஸ்பென்ஸ்–திகில் கதையம்சம் உள்ள இந்த படத்தில், ஒரு வழக்கை விசாரிக்கும் துப்பறியும் அதிகாரியாக நடிக்கிறேன். இது, எனக்கு நிச்சயமாக நல்ல பெயரை வாங்கி தரும் என்று நம்புகிறேன்.

மேலும் செய்திகள்