மேலும் 2 பட அதிபர்கள் புகார் நடிகர் வடிவேலுக்கு மீண்டும் நோட்டீஸ்

வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் ஆர்.கே. மற்றும் ஸ்டீபன் ஆகியோரும் புகார் அளித்துள்ளனர்.

Update: 2018-02-21 23:00 GMT
இயக்குனர் ஷங்கர் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் தயாரிக்க திட்டமிட்டார். இதில் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்தனர். சிம்பு தேவன் இயக்குவதாக இருந்தது. இதற்காக சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் அரங்கு அமைத்து இருந்தனர்.

ஆனால் படக்குழுவினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வடிவேலு நடிக்க மறுத்துவிட்டார். இதனால் படம் நின்று போனது. வடிவேலு மீது ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து நடிகர் சங்கம் மூலம் வடிவேலுவிடம் விளக்கம் பெறப்பட்டது.

இந்த நிலையில் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் ஆர்.கே. மற்றும் ஸ்டீபன் ஆகியோரும் புகார் அளித்துள்ளனர். ஆர்.கே. எல்லாம் அவன் செயல், அழகர் மலை, புலிவேஷம், என்வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.

இவர் புதிதாக ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ என்ற படத்தை தயாரிக்க இருந்தார். இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்து இருந்தார். இதற்காக அவருக்கு ரூ.75 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்புக்கு வடிவேலு வரவில்லை என்று ஆர்.கே. புகார் கூறியுள்ளார்.

இதுபோல் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா இயக்குவதாகவும், ஸ்டீபன் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் கதையை வடிவேலு மாற்ற சொன்னதால் படப்பிடிப்பு நின்றுபோனதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இந்த 2 புகார்கள் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரித்து வருகிறது. நடிகர் சங்கம் மூலம் வடிவேலுக்கு விளக்கம் கேட்டு மீண்டும் நோட்டீஸ் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்