கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு

ரன்வீர் சிங் ஜோடியாக நடிக்க பிரியாவாரியருடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-03-12 23:15 GMT
‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் கண்சிமிட்டி நடித்து ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமான பிரியா வாரியருக்கு படங்களும் பணமும் குவிகிறது. இன்ஸ்டாகிராமில் பிரியாவாரியரை பின்தொடர்வோர் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி உள்ளது. இதை பயன்படுத்தி சில நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த பிரியாவாரியரை அணுகி உள்ளதாகவும் ஒரு பதிவுக்கு அவர் ரூ.8 லட்சம் கேட்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு படமொன்றில் நடிக்க ஏற்கனவே பிரியா வாரியரிடம் பேசி உள்ளனர். தற்போது இந்தியில் ரோஹித் ஷெட்டி இயக்கும் சிம்பா என்ற படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக நடிக்க பிரியாவாரியருடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரன்வீர் சிங் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய பத்மாவத் படத்தில் அலாவுதின் கில்ஜியாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர். தெலுங்கில் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் இந்தி ரீமேக் ஆக சிம்பா தயாராகிறது. ஒரு அடார் லவ் ரிலீசாவது வரை வேறு படங்களில் நடிக்க கூடாது என்று ஒப்பந்தம் போட்டு உள்ளதால் இந்தி படத்தில் பிரியா வாரியர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 

மேலும் செய்திகள்