மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
தனது தந்தை சில அறிவுரைகள் கூறியிருப்பதாக கமல்ஹாசன் மகள் சுருதி ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
நடிகை சுருதிஹாசனுக்கு ‘சபாஷ் நாயுடு’ என்ற ஒரு படம் மட்டும் கைவசம் உள்ளது. வேறு புதிய படங்களுக்கு ஒப்பந்தம் ஆகவில்லை. சினிமாவை விட்டு விலகப் போகிறீர்களா? என்று கேட்டபோது முழு நேரமும் சினிமாவிலேயே இருக்க முடியாது. இசை, சொந்த வாழ்க்கை என்று எனக்கு இன்னொரு உலகமும் இருக்கிறது. நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன் என்றார்.
சுருதிஹாசனுக்கும், லண்டன் நடிகர் மைக்கேலுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் ஜோடியாக சுற்றும் படங்களும் இணையதளங்களில் பரவி வருகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை சுருதிஹாசன் இன்னும் உறுதிபடுத்தவில்லை.
இந்த நிலையில் தனக்கு கமல்ஹாசன் சில அறிவுரைகள் கூறியிருப்பதாக ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-
“தினமும் படுக்கைக்கு செல்லும்போது அன்று நடந்த விஷயங்களை சிந்தித்து பார்க்க வேண்டும் என்று எனது தந்தை கூறியிருக்கிறார். யாரையெல்லாம் சந்தித்தோம். அவர்களிடம் எப்படி பழகினோம். ஏதேனும் தவறு செய்தோமா, யார் மனதையாவது நோகடித்தோமா? என்ன நல்ல விஷயங்கள் செய்தோம்? என்பதையெல்லாம் ஞாபகத்துக்கு கொண்டுவர வேண்டும்.
அப்படி செய்வதன் மூலம் நன்றாக தூக்கம் வரும். ஏதேனும் தவறு செய்து இருந்தால் வாழ்க்கையில் மீண்டும் அதை செய்ய மாட்டோம். என்றெல்லாம் அவர் அறிவுரை கூறியிருக்கிறார். அதை தூங்கப் போகும்போது பின்பற்றுகிறேன். இதனால் நன்றாக தூக்கம் வருகிறது. வாழ்க்கையும் செம்மையாக மாறி இருக்கிறது. ரசிகர்களும் இதை செய்து பார்க்கலாம்.”
இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.