சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா

நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளியான அறம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படம் தெலுங்கிலும் ‘டப்பிங்’ செய்து வெளியிடப்பட்டு வசூல் குவித்தது.

Update: 2018-03-18 22:45 GMT
காதலர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து சில வாரங்கள் ஓய்வெடுத்து வந்த நயன்தாரா தற்போது மீண்டும் நடிக்க தயாராகி உள்ளார். சிரஞ்சீவியுடன் ‘சை நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. படப்பிடிப்பில் நயன்தாரா பங்கேற்று நடித்து வருகிறார்.

சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரூ.150 கோடி செலவில் இந்த படம் தயாராகி வருகிறது. சிரஞ்சீவி மகன் ராம்சரண் தயாரிக்கிறார். இதில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை முடித்து விட்டு அஜித்குமாருடன் ‘விசுவாசம்’ படத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார். அதன்பிறகு ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்திலும் மலையாளத்தில் தயாராகும் திகில் படமொன்றிலும் நடிக்க உள்ளார்.

மேலும் செய்திகள்