சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் முன்னாள் கதாநாயகி

பூஜா தட்வாலை அவரது கணவர் ஆஸ்பத்திரியிலேயே விட்டுவிட்டு ஓடி விட்டார்.

Update: 2018-03-19 23:02 GMT
நடிகர் சல்மான்கானுடன் ‘வீர்காடி’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூஜா தட்வால். இந்துஸ்தான், சிந்தூர் கி சவுகாந்த் உள்பட மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் கோவாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு நுரையீரலில் நோய் தோற்று ஏற்பட்டது. பரிசோதனையில் அது காசநோய் (டி.பி.) என்று தெரியவந்தது.

இதையடுத்து பூஜா மும்பையில் உள்ள காசநோய் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்தது. இந்தநிலையில் பூஜா தட்வாலை, அவரது கணவர் ஆஸ்பத்திரியிலேயே விட்டுவிட்டு ஓடி விட்டார்.

பூஜா தட்வால் கையில் பணம் இல்லாமல் தவிக்கிறார். அவர் மீது சிலர் பரிதாபப்பட்டு சாப்பாடு வாங்கிக்கொடுக்கின்றனர். தனது பரிதாப நிலை குறித்து பேசி, பூஜா தட்வால் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், 6 மாதங்களுக்கு முன்பே தனக்கு காசநோய் வந்து விட்டது என்றும், மருந்து வாங்க பணம் இல்லை என்றும் தெரிவித்து உள்ளார். சல்மான்கானிடம் உதவி பெற முயற்சித்தேன். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கண்ணீர்மல்க கூறியுள்ளார். பூஜா தட்வால் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது.

மேலும் செய்திகள்