ஆறு வயதில் சென்னையில் வைத்து பாலியல் பலாத்காரம் பிரபல பாலிவுட் நடிகை பகீர் தகவல்
பிரபல பாலிவுட் நடிகை டைசி இரானி தான் ஆறு வயதில் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். #MeToo
மும்பை
பாலியல் சம்பவங்களில் பாதிக்கபட்டவர்கள் தங்களுக்கு நடந்த இன்னல்களை வெளியே சொல்ல தயங்கினர். இதற்காகவே மீ டூ ”#MeToo” பெண்ணிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து தங்கள் சொந்த குடும்பங்கள் மற்றும் உறவினர் கைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் இன்னல்களை வெளியிட வாய்ப்பு கிடைத்து உள்ளது என நம்பிக்கை அடைந்து உள்ளனர்.
இந்தி திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளவர் டைசி இரானி. தற்போது 60 வயதை கடந்துவிட்டதால் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டுள்ளார். சினிமா மற்றும் சின்னத்திரைகளில் தற்போது சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் அதிகளவில் நடிக்க தொடங்கியிருப்பது இரானிக்கு கவலையை அளித்துள்ளது.
சிறுமியாக இருக்கும் போது தான் அனுபவித்த வேதனைகள் குறித்து அவர் மனம் திறந்துள்ளார். இரானி கூறுகையில், 1950-களில் சென்னைக்கு மெட்ராஸ் என பெயர். எனக்கு ஆறு வயதாக இருந்த போது மெட்ராசில் நடந்த ஒரு திரைப்பட சூட்டிங்கில் நடிக்க வந்தேன். என்னுடன் வந்த பாதுகாவலர் வெளிப்புற படப்பிடிப்பு நடந்த இடத்தில் என்னை பலாத்காரம் செய்தார்.
மேலும், என்னை அடித்து உதைத்து இதை யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டினார். அந்த நபரின் பெயர் நசீர், அவர் தற்போது இறந்துவிட்டார். என்னை நடிகையாக்க அந்த வயதிலேயே என் அம்மா முடிவு செய்தார். இதையடுத்து திரையுலகில் அதிகம் பேரை தெரிந்துவைத்திருந்த நசீர் என்னை அணுகி படப்பிடிப்புக்கு நடிக்க அழைத்து சென்ற போதே இச்சம்பவம் நடந்தது. பல ஆண்டுகளாக இதை என் அம்மாவிடம் நான் சொல்லவில்லை. தற்போது திரையுலகில் குழந்தை நட்சத்திரங்கள் அதிகம் பேர் வருவதை பார்த்தால் கவலையாக உள்ளது என கூறியுள்ளார்.