படமாகும் வாழ்க்கை கதை என்.டி.ராமராவ் வேடத்தில் பாலகிருஷ்ணா

என்.டி.ராமராவ் கதாபாத்திரத்தில் அவரது மகனும் நடிகருமான பாலகிருஷ்ணா நடிக்கிறார்.

Update: 2018-03-29 23:15 GMT
மறைந்த தெலுங்கு நடிகரும் ஆந்திர முன்னாள் முதல் மந்திரியுமான என்.டி.ராமராவ் வாழ்க்கை தெலுங்கு, இந்தியில் சினிமா படமாக தயாராகிறது. தமிழிலும் இந்த படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர். என்.டி.ராமராவின் சினிமா வாழ்க்கை, அரசியல், முதல்-மந்திரியாகி நிறைவேற்றிய திட்டங்கள் அனைத்தும் இந்த படத்தில் இடம்பெறுகிறது.

இதில் என்.டி.ராமராவ் கதாபாத்திரத்தில் அவரது மகனும் நடிகருமான பாலகிருஷ்ணா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். ‘தான வீர சூர கர்ணா’ படத்தில் துரியோதனனாக என்.டி.ராமராவ் நடித்து இருந்தார். இதன் படப்பிடிப்பு 1976-ம் ஆண்டு ஜூன் 7-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் நடந்தபோது எம்.ஜி.ஆர் அதில் கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

அதேபோன்று என்.டி.ராமராவ் வேடத்தில் பாலகிருஷ்ணா துரியோதனனாக நடிப்பது போன்றும் எம்.ஜி.ஆர் ‘கிளாப்’ அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைப்பது போன்றும் முதல் காட்சியை படமாக்கினார்கள். புராண காலத்து ஆடை ஆபரணங்களை அணிந்து பாலகிருஷ்ணா நடித்தார். புராண படங்களில் கிருஷ்ணர், நாரதர் உள்ளிட்ட வேடங்களில் என்.டி.ராமராவ் நடித்து இருக்கிறார். அதேபோன்ற கதாபாத்திரங்களில் பாலகிருஷ்ணா நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்படுகின்றன.

என்.டி.ராமராவுடன் சமகாலத்தில் வாழ்ந்த எம்.ஜி.ஆர், நாகேஷ்வரராவ், கிருஷ்ணா, ராஜ்குமார் கதாபாத்திரங்களும் படத்தில் இடம்பெறுகின்றன.

இந்த படத்தை தேஜா டைரக்டு செய்கிறார். பட தொடக்க விழாவில் பாலகிருஷ்ணா பேசும்போது, “எனது தந்தை தான் எனக்கு உலகம். தெலுங்கு மக்கள் இதயங்களில் அவர் வாழ்கிறார். அவரது கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது” என்றார். 

மேலும் செய்திகள்