நீயெல்லாம் நடிகையாகலாமா? ரசிகர் விமர்சனத்தால் டாப்சி கோபம்

நீயெல்லாம் நடிகையாகலாமா என ரசிகர் செய்த விமர்சனத்தால் டாப்சி கோபம் அடைந்தார்.

Update: 2018-04-18 22:45 GMT

தமிழில் ஆடுகளம், ஆரம்பம் படங்கள் மூலம் பிரபலமான டாப்சி தெலுங்கு, இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமீபத்தில் அவருடைய புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், “நீ சராசரியான பொண்ணுதான். உன்னையெல்லாம் கதாநாயகி ஆக்கியது யார்?” என்று கேள்வி எழுப்பி கருத்து வெளியிட்டார்.

இது டாப்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. “கொஞ்சமாக நடிப்பதால்தான் என்னை கதாநாயகி ஆக்கி விட்டார்கள். நான் சராசரியான பெண்ணாக இருப்பதில் பிரச்சினை இல்லையே. இந்த உலகத்தில் நீங்கள் சொன்ன மாதிரியான சராசரி பெண்கள்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள்” என்று சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்தார். இதனால் விமர்சன கருத்தை அந்த ரசிகர் சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கி விட்டார். டாப்சி இந்தியில் 4 படங்களில் நடித்து முடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“இந்தியில் தட்கா, சூர்மா, முல்க், மன்மரிஷியான் ஆகிய படங்களில் நடிக்கிறேன். இவற்றின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளன. நாம் சபானா, பிங்க் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தின. சில படங்கள் கதாநாயகர்களுக்காகவே ஓடும். பிங்க் படத்தில் அமிதாப்பச்சன் இருந்தது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அவருக்காக தியேட்டரில் கூட்டம் வந்தது.

சினிமாவில் எனக்கென்று புதிய பாணியை உருவாக்கி இருக்கிறேன். எனது முழு நடிப்பு திறமையை காட்டும் கதையம்சம் உள்ள படம் இன்னும் அமையவில்லை. அந்த கதைக்காக காத்து இருக்கிறேன். சினிமாவில் எனக்கு நண்பர்கள் கிடையாது.” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்