விரைவில் திருமணம் மலையாளத்தில் கவனம் செலுத்தும் நயன்தாரா

விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் மலையாளத்தில் கவனம் செலுத்த உள்ளார் நயன்தாரா.

Update: 2018-04-18 23:00 GMT

தென்னிந்திய மொழிகளில் மலையாள பட உலகம்தான் மூத்த நடிகைகளுக்கு சொர்க்கம். திருமணத்துக்கு பின் 40 வயதுகளில் கூட கதாநாயகிகள் வேடங்கள் கிடைக்கின்றன. கதைகளையும் வலுவாக உருவாக்குகிறார்கள். மற்ற மொழிகளில் திருமணமான நடிகைகளை அக்கா, அண்ணி வேடங்களுக்கு முத்திரை குத்திவிடுவார்கள்.

தமிழ், தெலுங்கு அளவுக்கு மலையாளத்தில் சம்பளம் கிடைக்காது. ஆனாலும் கதாநாயகிகள் தனித்து திறமையை வெளிப்படுத்த முடியும். தமிழில் ஆறு படங்கள் கைவசம் வைத்து நம்பர்-1 நடிகையாக திகழும் நயன்தாரா அடுத்தடுத்து மலையாளத்தில் படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக லவ் ஆக்‌ஷன் டிராமா என்ற படத்தில் நடிக்கிறார்.

அடுத்து ‘கோட்டயம் குர்பானா’ என்ற மலையாள படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து மலையாள மார்க்கெட்டை பிடிக்க அவர் திட்டமிடுவதாக தெரிகிறது. விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார். எனவேதான் திருமணத்துக்கு பிறகும் கதாநாயகியாகவே நீடிக்க மலையாள படங்கள் பக்கம் கவனம் செலுத்துகிறார் என்கிறார்கள்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இரண்டு ஆண்டுகளாக காதலிப்பதும் இருவருமே அதை உறுதிப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்