புது நடிகைகள் வரவால் சினிமாவில் போட்டி உள்ளது - காஜல் அகர்வால்

புது நடிகைகள் வரவால் சினிமாவில் போட்டி அதிகமாகி உள்ளது என காஜல் அகர்வால் கூறினார்.

Update: 2018-04-19 23:00 GMT

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் அடுத்து இந்தி படமொன்றுக்கு ஒப்பந்தமாகி உள்ளார். திரையுலக அனுபவங்கள் குறித்து அவர் கூறியதாவது:-

“நடிகைகள் சினிமாவில் அறிமுகமாவது பெரிய விஷயம் இல்லை. ஆனால் மார்க்கெட்டை தக்கவைப்பதுதான் சவாலாக இருக்கிறது. எனக்கு தென்னிந்திய மொழிகளில் நல்ல கதைகள் அமைந்தன. தமிழ், தெலுங்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தார்கள். அவர்கள் என்னை குடும்பத்தில் உள்ள ஒரு பெண்போலவே கருதி ஆதரவு தந்தார்கள். இது பெரிய மகிழ்ச்சி அளித்தது.

திரையுலகில் புதிது புதிதாக நிறைய நடிகைகள் வருகிறார்கள். இதனால் சினிமா போட்டி நிறைந்த உலகமாக மாறி இருக்கிறது. இந்த போட்டிகளுக்கு நடுவில் திறமை இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும். திறமையற்றவர்கள் ஒதுக்கப்பட்டு விடுவார்கள். எத்தனை நடிகைகள் வந்தாலும் எனக்கான இடத்தில் நான்தான் இருப்பேன். எனது பெயரை தக்க வைக்க தினமும் திறமையை மெருகேற்றி வருகிறேன்.

வித்தியாசமாக நடிக்க அக்கறை எடுக்கிறேன். இயக்குனர்கள் கதை சொல்லும்போது எனது மனதுக்கு பிடித்து இருந்தால்தான் நடிக்க சம்மதிப்பேன். கதை முக்கியமாக இருக்க வேண்டும். அதைவிட எனது கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும். கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துமா? என்பதில் கவனமாக இருந்து கதைகளை தேர்வு செய்கிறேன்.

10 வருடங்களாக எனது தேகமும் சருமமும் அப்படியே அழகாக இருக்கிறதே என்று பலரும் கேட்கிறார்கள். இயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகிறேன். மனசு அழகாக இருந்தால் தேகத்தில் பொலிவு வரும்.” இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

மேலும் செய்திகள்