“பெரும்பாலான டைரக்டர்கள் மோசமானவர்கள்தான்” - ஸ்ரீரெட்டி மீண்டும் புகார்

பெரும்பாலான டைரக்டர்கள் மோசமானவர்கள்தான் என ஸ்ரீரெட்டி மீண்டும் புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-05-19 22:30 GMT
தெலுங்கு பட உலகில் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்றும் தன்னையும் மோசம் செய்து விட்டனர் என்றும் ஸ்ரீரெட்டி புகார் கிளப்பியது இந்தியா முழுவதும் பரபரப்பானது. மகளிர் ஆணையம் விசாரணையில் இறங்கி தெலுங்கானா அரசிடம் அறிக்கை கேட்டு உள்ளது. தெலுங்கு நடிகர் சங்கமும் குழு அமைத்து விசாரிக்கிறது.

ஸ்ரீரெட்டி நடிக்க விதித்திருந்த தடையை நீக்கி விட்டனர். டைரக்டர்கள் சேகர் கம்முலும், கோனா வெங்கட், கொரட்டலா சிவா, நடிகர் ராணாவின் தம்பியும் தயாரிப்பாளர் சுரேஷ்பாபுவின் மகனுமான அபிராம் ஆகியோர் மீது ஸ்ரீரெட்டி செக்ஸ் புகார் கூறியிருந்தார். நடிகை ஜீவிதா மீதும் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது.

இதில் மகளிர் சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். நடிகை ஸ்ரீரெட்டியையும் அழைத்து இருந்தனர். அப்போது இயக்குனர்கள் மீது ஸ்ரீரெட்டி மீண்டும் குற்றம் சாட்டினார். அவர் பேசியதாவது:-

“தெலுங்கு இயக்குனர்களில் பெரும்பாலானவர்கள் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் கொண்டவர்கள்தான். அவர்களின் தொல்லைகளை நடிகைகள் துணிச்சலாக வெளியே சொல்ல தயங்குகிறார்கள். அப்படி சொன்னால் அடுத்த படத்துக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்று பயப்படுகிறார்கள். தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்றும் அஞ்சுகிறார்கள். சம்பளத்தில் கூட பாரபட்சம் உள்ளது. கதாநாயகனுக்கு ரூ.10 கோடி கொடுக்கிறார்கள். கதாநாயகிக்கு ரூ.1 கோடி கூட கொடுப்பது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை அபூர்வா பேசும்போது “அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது பாலியல் புகார் கூறினால் நடிகையின் மீது அபாண்டமாக பழி சுமத்தி வாழ்க்கையை நாசம் செய்து விடுகிறார்கள். இதனால் நடிகைகள் பயப்படுகிறார்கள்” என்றார்.

மேலும் செய்திகள்