‘வஞ்சகர் உலகம்’ படத்தில் ‘‘படுக்கை அறை காட்சியில் துணிச்சலாக நடித்தது எப்படி?’’ நடிகை சாந்தினி பேட்டி

‘வஞ்சகர் உலகம்’ படத்தில், படுக்கை அறை காட்சியில் துணிச்சலாக நடித்தது எப்படி? என்று நடிகை சாந்தினி விளக்கினார்.

Update: 2018-09-15 21:30 GMT
‘மெட்ரோ’ சிரிஷ்–சாந்தினி ஜோடியாக நடித்து, தரணிதரன் டைரக்‌ஷனில், வாசன் என்ற சக்தி வாசன் தயாரித்துள்ள ‘ராஜா ரங்குஸ்கி’ படக்குழுவினர், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சாந்தினி அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து வந்த நீங்கள், ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் படுக்கை அறை காட்சியில் துணிச்சலாக நடித்தது எப்படி?

பதில்:– அந்த படத்தின் கதையை சொன்ன டைரக்டர் மனோஜ் பீதா, படத்தில் அப்படி ஒரு படுக்கை அறை காட்சி இருப்பதாகவும் சொன்னார். அவரிடம், 2 மணி நேரம் கதையை கேட்டேன். அவர் மீதும், அந்த படக்குழுவினர் மீதும் எனக்கு நம்பிக்கை வந்தது. என் கதாபாத்திரத்தின் மீது படம் பார்ப்பவர்களுக்கு அனுதாபம் ஏற்படும் என்பதை உணர்ந்தேன். அதனால்தான் நடிக்க சம்மதித்தேன். நான் எதிர்பார்த்தது போலவே ‘வஞ்சகர் உலகம்’ படத்தில், என் கதாபாத்திரம் பாவமாக இருந்தது என்று படம் பார்த்தவர்கள் கூறினார்கள்.

படிப்பு

கேள்வி:– ‘விசுவல் கம்யூனிகே‌ஷன்’ படித்த நீங்கள் சினிமாவுக்கு வந்தது எப்படி? 

பதில்:– படிக்கும்போதே நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. படித்துக் கொண்டிருக்கும்போதே குறும் படம் ஒன்றை இயக்கி நடிக்க எனக்கு சந்தர்ப்பம் வந்தது. அதில், சரண்யா பொன்வண்ணன் நடித்தார். என் முதல் படம் ‘சித்து பிளஸ்–2’. பாக்யராஜ் டைரக்‌ஷனில் வந்தது. தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவதால், நடிப்பை தொடர்கிறேன். இப்போது 3 தமிழ் படங்களிலும், 3 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறேன்.

பாலியல் தொல்லை

கேள்வி:– இளம் கதாநாயகிகளுக்கு சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பதாக சிலர் கூறுகிறார்களே...?

பதில்:– எனக்கு அப்படி துன்புறுத்தல்கள் எதுவும் வரவில்லை. சினிமா உலகை பாதுகாப்பான உலகமாக உணர்கிறேன். இதுவரை என்னை யாரும் துன்புறுத்தியதில்லை.’’

இவ்வாறு சாந்தினி கூறினார்.

மேலும் செய்திகள்