‘‘தமிழை காப்பாற்ற அரசியல் நடவடிக்கை தேவை’’ படவிழாவில் பாக்யராஜ் பேச்சு

‘ஒளடதம்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இந்த படத்தை நேதாஜி பிரபு தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சமீரா நடித்துள்ளார்.

Update: 2018-10-04 22:45 GMT
 மருத்துவ உலக மோசடிகளை சித்தரிக்கும் படம். ரமணி இயக்கி உள்ளார். இந்த படம் திரையிடப்படும் தியேட்டர்களில் தமிழா தமிழில் கையெழுத்திடு என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை படக்குழுவினர் நடத்த உள்ளனர்.

இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர் பாக்யராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:–

‘‘நான் தமிழில் தான் எப்போதும் கையெழுத்து போடுவேன். காசோலைகளிலும் தமிழில் கையெழுத்திடுகிறேன். ஆனால் தமிழில் கையெழுத்து போடுவதால் தமிழ் வளர்ந்து விடுமா?. நான் சீனா சென்றபோது அங்கு ஆங்கிலமே இல்லாமல் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் எல்லாவற்றிலும் முன்னேறித்தான் இருக்கிறார்கள். ஆங்கிலம் பேசும் ஆட்களைத்  தேடிப்பிடிக்கும் நிலை இருந்தது.

அங்கு தகவல் தொடர்புக்கு நான் சிரமப்பட்டேன். அண்மையில் ஒரு தெலுங்கு படப்பிடிப்புக்காக கம்போடியா சென்றேன். அங்குள்ளவர்களுக்கும் ஆங்கிலம் தெரியாததால் தகவல் தொடர்பு பிரச்சினையால் பாதியிலேயே ஊர் திரும்பினேன். விமான நிலையத்தில் என்னை ஒரு குற்றவாளியைப்போல் நடத்தினார்கள். சில நாடுகளில் ஆங்கிலம் தெரிந்தாலும் பேச மாட்டார்கள். எனவே தமிழைக் காப்பாற்ற அரசியல்பூர்வமான நடவடிக்கைகள் வந்தால்தான் முடியும்.’’

இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

டைரக்டர் பேரரசு, எம்.சி.சேகர், தயாரிப்பாளர் அருண்ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்