அடித்து பாலியல் தொல்லை காயத்துடன் படத்தை வெளியிட்டு புளோரா அதிர்ச்சி

பிரபல நடிகை புளோரா தயாரிப்பாளர், தன்னை அடித்து தாடையை உடைத்து பாலியல் சித்ரவதை செய்ததாக காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

Update: 2018-10-09 22:15 GMT
நடிகைகள் ஸ்ரீரெட்டி, தனுஸ்ரீதத்தா, கங்கனா ரணாவத் உள்ளிட்ட சில நடிகைகள் பாலியல் தொல்லை கொடுத்தவர்களை அம்பலப்படுத்தி திரையுலகை அதிர வைத்து வருகிறார்கள். 

இப்போது பிரபல நடிகை புளோராவும் தயாரிப்பாளர், தன்னை அடித்து தாடையை உடைத்து பாலியல் சித்ரவதை செய்ததாக பகீர் குற்றச்சாட்டு சொல்லி காயத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். 

புளோரா தமிழில் விஜயகாந்தின் கஜேந்திரா படத்தில் நடித்தவர். கார்த்திக்குடன் குஸ்தி, திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் குசேலன் படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார். ஆஷா சைனி என்ற பெயரில் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். 

கவுரங் தோஷி தாக்கியதால் காயம் அடைந்த புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டு கூறியிருப்பதாவது:–

‘‘நானும், தயாரிப்பாளர் கவுரங் தோஷியும் சில மாதங்கள் ஒன்றாக சுற்றினோம். 2007–ம் ஆண்டு காதலர் தினத்தில் என்னை அவர் கடுமையாக தாக்கினார். ஒரு வருடம் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனாலும் என்னை அடித்து சித்ரவதை செய்தார். 

இதனால் எனது தாடையின் எலும்பு முறிந்தது. பயந்தபடி அவரை விட்டு விலகினேன். கவுரங் தோஷி அப்போது சக்தி மிக்கவராக இருந்தார். எல்லோரும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டனர். நான் சினிமாவுக்கு புதிதாக வந்தவள் என்பதால் அவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. அவரும் இதையே சொல்லி என்னை மிரட்டினார். 

என்னை சினிமாவில் இருந்து ஒழித்து விடுவதாக எச்சரித்தார். அவர் சொன்னபடியே சில படங்களில் இருந்து என்னை நீக்கினார்கள். புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யவும் மறுத்தனர். இதனால் மனம் உடைந்து போனேன். எனது வாழ்க்கையே சிதைந்து போனது.’’

இவ்வாறு புளோரா கூறியுள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்