‘‘மாணவர்களுடன் நடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ நடிகர் விவேக் பேச்சு

மாணவர்களுடன் நடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று நடிகர் விவேக் கூறினார்.

Update: 2018-10-13 22:30 GMT
சமூக கருத்து ஒன்றை கருவாக வைத்து உருவாகியிருக்கும் படம், ‘எழுமின்.’ வி.பி.விஜி தயாரித்து இயக்கியிருக்கிறார். இந்த படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் விவேக் நடித்து இருக்கிறார். அவருடன் தேவயானி, அழகம் பெருமாள், பிரேம் ஆகியோரும் நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வர இருப்பதையொட்டி, பத்திரிகையாளர்களுக்கு படக்குழுவினர் பேட்டி அளித்தார்கள். அதில் நடிகர் விவேக் கலந்து கொண்டு பேசியதாவது:–

‘‘இப்போதெல்லாம் கதாநாயகனை காட்டிலும் வில்லனுக்குத்தான் அதிக பெயர் கிடைக்கிறது. அதனால், இந்த படத்தின் வில்லன் ரிஷிக்கும் பெயர் கிடைக்கும். படத்தில், மாணவர்களுக்கு ஒரு நல்ல வி‌ஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதை செய்து இருக்கிறார்கள்.

‘எழுமின்’ படத்தின் உண்மையான கதாநாயகன் யார் என்றால், படத்தில் நடித்துள்ள மாணவர்கள்தான். அவர்களுடன் நான் நடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். 18–ந் தேதி வடசென்னை, சண்டக்கோழி–2 என இரண்டு பெரிய படங்கள் வருகிறது. இவர்களுடன் நாங்களும் வருகிறோம். இந்த படத்தை மாணவர்கள் தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டும்.’’

இவ்வாறு விவேக் பேசினார்.

விழாவில் இசையமைப்பாளர்கள் கணேஷ் சந்திரசேகர், ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், கலை இயக்குனர் ராம் ஆகியோரும் பேசினார்கள்.

மேலும் செய்திகள்