“சம்பளத்துக்காக 2 வருடம் காத்திருக்க வைத்தனர்” - ராதிகா ஆப்தே வருத்தம்

தனது சம்பளத்துக்காக 2 வருடம் காத்திருந்ததாக ராதிகா ஆப்தே கூறினார்.

Update: 2018-10-14 22:30 GMT

தமிழில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா,’ ‘டோனி,’ ‘வெற்றிச்செல்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக வருகிறார். சமீபத்தில் ராதிகா ஆப்தே அரைகுறை உடையில் தோன்றிய ஆபாச படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வருமாறு:-

“நான் இப்போது 2 ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறேன். ஹாலிவுட்டில் இருப்பவர்களின் தொழில் நடவடிக்கைகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. அவர்கள் வேலை செய்யும் விதமும் வித்தியாசமாக இருக்கிறது. நான் ஒரு முறைகூட படத்தில் நடித்ததற்கு சம்பளத்தை கொடுங்கள் என்று கேட்டதே இல்லை.

சம்பள தேதிக்கு முன்னதாகவே அதை எனக்கு தந்து விடுகிறார்கள். நடிகர், நடிகைகளுக்கு சம்பளம் முக்கியம். அதை குறிப்பிட்ட நேரத்தில் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது உண்டு. சம்பளத்துக்காகத்தானே நாம் வேலை பார்க்கிறோம். ஹாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு சம்பளம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதற்கு முன்பே அதை கொடுத்து விடுகிறார்கள்.

இந்தியாவில் அப்படி இல்லை. நான் நடித்த படங்கள் வெளியான பிறகு கூட சம்பளம் தருவது இல்லை. சில படங்களின் சம்பளத்துக்காக 2 ஆண்டுகள்வரை காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது.”

இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

மேலும் செய்திகள்