பெண்களை வெட்டுவேன் என்று பேச்சு - நடிகர் கொல்லம் துளசி கைது ஆவாரா?

பெண்களை வெட்டுவேன் என்று பேசிய நடிகர் கொல்லம் துளசி கைது ஆவாரா என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-10-14 23:00 GMT
சபரி மலையில் பெண்களை அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் போராட்டம் வலுத்துள்ளது. கண்டன கூட்டங்கள், பேரணிகள் நடந்து வருகின்றன. பா.ஜனதா கூட்டணி சார்பில் பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகம் நோக்கி ஊர்வலம் நடந்து வருகிறது.

கொல்லத்தில் இந்த ஊர்வலத்துக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் கொல்லம் துளசி, சபரி மலைக்கு வரும் பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

அவர் பேசும்போது, “தீர்ப்பை வைத்து சபரிமலை கோவிலுக்கு சென்று விடலாம் என்று சில பெண்கள் கருதுகிறார்கள். அப்படி வரும் பெண்களை இரு துண்டாக வெட்டி அதில் ஒரு பாதியை டெல்லிக்கும் இன்னொரு பாதியை முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அலுவலகத்துக்கும் அனுப்ப வேண்டும்” என்றார்.

“தாய்மார்கள் சபரிமலைக்கு வருவதில் தவறு இல்லை. இளம்பெண்கள் வரக்கூடாது” என்றும் கூறினார். கொல்லம் துளசியின் கொலை வெறிப்பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அவர்மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கொல்லம் துளசி மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அய்யப்பன் மீதுள்ள தீராத பக்தி காரணமாக அப்படி பேசிவிட்டதாக கொல்லம் துளசி மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் செய்திகள்