விஜய்யின் ‘ சர்கார்’ கதை கசிந்ததா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சர்கார்’ படம் கதை கசிந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2018-10-21 23:00 GMT
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் கதைக்கு ஒருவர் உரிமை கொண்டாடி வருகிறார். ஏ.ஆர்.முருகதாசோ தனது கதை என்கிறார். இந்த நிலையில் சர்கார் கதை கசிந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ள கதை வருமாறு:-

அமெரிக்காவில் வசிக்கும் பெரிய தொழில் அதிபர் விஜய்க்கு பல்வேறு நாடுகளில் தொழில் நிறுவனங்கள் உள்ளன. தமிழரான அவருக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்னை வருகிறார். வாக்கு சாவடிக்கு சென்று ஓட்டை பதிவு செய்ய முற்படும்போது அதிர்ச்சி. வாக்குச்சாவடியில் இருப்பவர்கள் உங்கள் ஓட்டு ஏற்கனவே பதிவாகி விட்டது என்கின்றனர். தோல்வியையே சந்திக்காத விஜய்க்கு முதல் முறையாக அவமானம் ஏற்படுகிறது. தேர்தல் முறைகேடுகளை பார்த்து கொதித்து அரசியல்வாதிகளான ராதாரவி, வரலட்சுமி ஆகியோருடன் மோதுகிறார்.

இதற்காக இளைஞர்களை திரட்டுகிறார். பணம் வாங்காமல் ஓட்டளிக்கும்படியும் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் பிரசாரம் செய்கிறார். அவருக்கு ஆதரவு பெருகுகிறது. பணம்கொடுத்து வாக்காளர்களை வளைக்க அரசியல்வாதிகள் கண்டெய்னர்களில் பணத்தை இறக்குகின்றனர். அதை தடுக்கும் விஜய்யை தீர்த்து கட்ட வில்லன்களை ஏவுகிறார்கள்.

அதையெல்லாம் எதிர்கொண்டு நேர்மையாக தேர்தல் நடத்தி நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்க வைத்து நாட்டை எப்படி சீரமைக்கிறார் என்பது கதை என்கின்றனர்.

மேலும் செய்திகள்