மகள் போலீசில் புகார் கன்னட நடிகர் மீது வழக்கு

கன்னட நடிகர் துனியா விஜய் மீது அவரது மகள் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2018-10-24 22:30 GMT
பிரபல கன்னட நடிகர் விஜய். இவர் நடித்த ‘துனியா’ என்ற கன்னட படம் வெற்றிகரமாக ஓடியது. சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசு விருதையும் பெற்று கொடுத்தது. இதனால் அவரை துனியா விஜய் என்றும் அழைத்தனர். சந்தா, ஜங்கில், ஜெயமன மஹா உள்பட பல வெற்றி படங்களில் கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். 

இவருக்கு நாகரத்னா, கீர்த்தி என்று 2 மனைவிகள் உள்ளனர். பெங்களூருவில் உள்ள கிரி நகரில் இரண்டாவது மனைவி கீர்த்தியுடன் அவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் துனியா விஜய்யை பார்க்க முதல் மனைவியும், மகள் மோனிகாவும் (வயது 19) வீட்டுக்கு வந்தனர். அப்போது முதல் மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. 

மோனிகா தனது தாய்க்கு ஆதரவாக தந்தை துனியா விஜய்யிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மகளை அடித்து உதைத்து சுவரில் தள்ளியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மோனிகா கிரி நகரில் உள்ள போலீசில் துனியா விஜய் மீது புகார் அளித்தார். போலீசார் இந்திய தண்டனை சட்டம் 341 (தவறாக பேசியது) 324 (பயங்கர ஆயுதங்களால் தாக்கியது) உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். துனியா விஜய் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. காயம் அடைந்த மோனிகா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்