சிக்கலில் ‘சர்கார்’ படம்

சிக்கலில் சர்கார் படம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-10-29 23:30 GMT

விஜய் நடித்து வெளிவந்த கத்தி படம் திருட்டு கதை என்று சர்ச்சைகள் வந்தன. அதேபோல் சர்கார் படமும் பிரச்சினையில் சிக்கி உள்ளது. இந்த படத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். தீபாவளிக்கு சர்கார் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் சர்கார் படம் தான் எழுதிய செங்கோல் கதை என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜும் சர்கார் கதையும் வருண் ராஜேந்திரன் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சையையும் தற்கால அரசியலையும் கருவாக வைத்து இந்த படத்தை எடுத்து இருப்பதாக ஏ.ஆர். முருகதாஸ் தெளிவுபடுத்தி உள்ளார். கோபுரங்கள் சாய்வதில்லை படமும் பாக்யராஜ் இயக்கிய சின்னவீடு படமும் ஒரே மாதிரி இருப்பதாக கூறப்பட்டது. எனவே சின்ன வீடு படம் திருட்டுக்கதையா? என்றும் கேள்வி விடுத்தார்.

இந்த பிரச்சினையில் எழுத்தாளரும் சர்கார் படத்தின் வசனகர்த்தாவுமான ஜெயமோகன் கூறும்போது, “சிவாஜி கணேசன் ஓட்டை கள்ள ஓட்டாக போட்டதை கருவாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. 42 நாட்கள் ஓட்டலில் தங்கி ஒவ்வொரு காட்சியாக உருவாக்கினோம். கடந்த 2 வருடங்களில் நடந்த அரசியல் சம்பவங்கள் படத்தில் இருக்கும். இது திருட்டுக் கதை அல்ல” என்றார். சர்கார் படம் மீதான வழக்கு விசாரணை இன்று ஐகோர்ட்டில் நடக்க உள்ள நிலையில் தீர்ப்பு பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்