போக்குவரத்துக்கு இடையூறு; நடிகை ரவீணா தாண்டன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய இந்தி திரைப்பட நடிகை ரவீணா தாண்டன் மற்றும் 2 பேருக்கு எதிராக போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-03 15:33 GMT
முசாபர்பூர்,

இந்தி திரைப்பட உலகில் புகழ் பெற்ற நடிகை ரவீணா தாண்டன்.  இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

பீகாரில் கடந்த அக்டோபர் 12ந்தேதி ஓட்டல் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொள்ள ரவீணா சென்றுள்ளார்.  இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.  இதில் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ரவீணா ஓட்டல் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதனால் போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது.  இதில் நான் சிக்கி கொண்டேன். 

ஓட்டல் உரிமையாளர்களான தந்தை மற்றும் மகனான பிரணவ் குமார் மற்றும் உமேஷ் சிங் இவர்களுடன் நடிகை ரவீணா ஆகிய 3 பேருக்கு எதிராக பிரிவு 156(3)ன் கீழ் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவிட உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்.

இதனை அடுத்து நடிகை ரவீணா மற்றும் 2 பேர் மீது முசாபர்பூர் நகர போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய நீதிபதி தீபக் குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்