பாலியல் புகாரால் விலகிய படத்தில் நானா படேகருக்கு பதில் ராணா

தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்தவர் நானா படேகர். இவர் மீது தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறினார்.

Update: 2018-11-04 22:45 GMT
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தி படத்தில் நடித்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்தார்.

இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தி நடிகைகள் தனுஸ்ரீதத்தாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் சில நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படுத்தினார்கள். பாலியல் குற்றச்சாட்டை நானா படேகர் மறுத்ததுடன் தனுஸ்ரீதத்தா மீது மான நஷ்ட வழக்கும் தொடர்ந்தார். பதிலுக்கு தனுஸ்ரீதத்தாவும் நானா படேகர் மீது போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அக்‌ஷய்குமாரும் நானா படேகரும் ஹவுஸ்புல்–4 என்ற படத்தில் சேர்ந்து நடிப்பதாக இருந்தது. அந்த படத்தின் இயக்குனர் சஜித்கானும் பாலியல் சர்ச்சையில் சிக்கினார். இதனால் படப்பிடிப்பை நிறுத்துமாறு அக்‌ஷய்குமார் கூறிவிட்டார்.

விசாரணை முடியும்வரை குற்றம்சாட்டப்பட்டவர்கள் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த படத்தில் இருந்து சஜித்கானும் நானா படேகரும் விலகி விட்டனர். இதனால் நானா படேகருக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் ராணாவை தேர்வு செய்துள்ளனர். அக்‌ஷய்குமாருடன் நடிப்பதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் என்று ராணா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்