திருமணத்துக்காக இத்தாலி சென்ற தீபிகா படுகோனே

திருமணத்துக்காக, தீபிகா படுகோனே இத்தாலி சென்றார்.

Update: 2018-11-11 22:30 GMT
தமிழில் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தவர் தீபிகா படுகோனே. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பத்மாவத் படத்தின் மூலம் மேலும் நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. இவரும் இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்து வந்தனர். விழாக்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்றார்கள். வெளிநாடுகளிலும் சேர்ந்து சுற்றினர்.

ஆனாலும் காதலை வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தனர். இப்போது இருவரும் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். சமீபத்தில் தங்கள் திருமண தேதியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். அதில், “எங்கள் திருமணம் நவம்பர் 14 மற்றும் 15-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தனை ஆண்டுகளாக எங்கள் மீது வைத்த அன்புக்கு நன்றி. எங்கள் வாழ்க்கை பயணம் அன்பாக செல்ல உங்கள் ஆசியை வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இத்தாலியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். அங்குள்ள லேக் கோமோவில் திருமணம் நடக்கிறது. திருமணத்துக்கு முந்தைய சடங்கு நிகழ்ச்சிகள் மும்பையில் உள்ள தீபிகா படுகோனே வீட்டில் நடந்தன. இதில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் தீபிகா படுகோனேவும் ரன்வீர்சிங்கும் மும்பையில் இருந்து இத்தாலி புறப்பட்டுச் சென்றனர்.

விமானநிலையத்தில் ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி புறப்பட்டுச் சென்றார்கள். இத்தாலியில் திருமணத்தை முடித்து விட்டு மும்பை திரும்புகிறார்கள். மும்பையிலும் பெங்களூருவிலும் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்