நாய் கடித்ததற்காக நஷ்ட ஈடு கேட்கும் நடிகை

நாய் கடித்ததற்காக, நடிகை ரீனா அகர்வால் நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

Update: 2018-11-19 23:00 GMT
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் ரீனா அகர்வால். இவர் ‘கியா ஹால் மிஸ்டர் பாஞ்சால்’ என்ற தொடரில் நடித்துக்கொண்டு இருந்தபோது படப்பிடிப்பு அரங்கில் நாய் புகுந்து அவரை கடித்துவிட்டது. இதில் காயம் அடைந்த ரீனா அகர்வால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதற்கு தயாரிப்பாளரிடம் நஷ்ட ஈடு கேட்டு போர்க்கொடி தூக்கி உள்ளார். இதுகுறித்து ரீனா அகர்வால் கூறியதாவது:-

“கியா ஹால் மிஸ்டர் படப்பிடிப்பு அரங்கில் இருந்தபோது என்னை நாய் கடித்தது. ஏப்ரல் மாதம் இந்த சம்பவம் நடந்தது. இதற்கு தயாரிப்பாளர் இதுவரை எனக்கு நஷ்ட ஈடு தரவில்லை. நாய் கடிக்காக நான் 4 மாதங்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். இதற்கு அதிகம் செலவு ஆனது.

சிகிச்சைக்கு செலவான பணத்தை தயாரிப்பாளர்தான் கொடுக்க வேண்டும். ஆனால் இதுவரை அவர் பணம் தரவில்லை. சிகிச்சை பெற்றதற்கான பணத்தை தரும்படி நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன். இப்போது ரூ.95 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்வரை தருவதாக கூறியுள்ளனர். நாய் கடித்ததால் தொடரில் இருந்து வெளியேறி விட்டேன் என்று தவறாகவும் வதந்தி பரப்புகிறார்கள்” என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்