‘ஸ்லம்டாக் மில்லினர்’ நடிகை பிரீடா பின்டோ, காதலரை மணக்கிறார்

ஸ்லம்டாக் மில்லினர் நடிகை பிரீடா பின்டோ, தனது காதலரை மணக்க உள்ளார்.

Update: 2018-11-22 22:30 GMT
மும்பையை சேர்ந்த பிரீடா பின்டோ, ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படம் மூலம் நடிகையானார். இந்த படத்துக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன.

அதன்பிறகு பிரீடா பின்டோவுக்கு ஹாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்தன. இப்போது மோக்லி லெஜண்ட் ஆப் த ஜங்கிள், நீடில் இன் எ டைம்ஸ்டேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஆங்கில டி.வி தொடர்களிலும் நடிக்கிறார். இவர் சினிமாவில் அறிமுகமானபோது ரோஹன் அன்டோ என்பவரை காதலித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் திடீரென்று பிரிந்து விட்டார்கள். அதன்பிறகு ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் தன்னுடன் நடித்த தேவ் படேலை காதலித்தார். ஜோடியாக சுற்றினார்கள்.

அவரையும் 2014-ல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இப்போது சாகச புகைப்பட கலைஞரான கோரி டிரான் என்பவரை காதலித்து வருகிறார். பொது நிகழ்ச்சிகளுக்கு இருவரும் ஜோடியாக வருகிறார்கள். சமீபத்தில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியையும் ஜோடியாக பார்த்தனர். அப்போது ஸ்டேடியத்துக்குள் இருவரும் முத்தமிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

பிரீடாவுக்கு அவருடன் நடித்த ஹாலிவுட் நடிகர் ஆரோன் பாலின்தான் கோரி டிரானை அறிமுகப்படுத்தினார். முதலில் நட்பாக பழகிய இருவரும் பின்னர் காதல் வயப்பட்டனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் அடுத்த வருடம் இவர்கள் திருமணம் நடக்கும் என்றும் ஹாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும் செய்திகள்