பட அதிபருடன் சமரசம்: வடிவேலுக்கு எதிரான தடை நீக்கம்?

பட அதிபருடன் ஏற்பட்டுள்ள சமரசம் காரணமாக, வடிவேலுக்கு எதிரான தடை நீக்கம் செய்யப்படுமா என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2018-11-22 22:45 GMT
வடிவேலு நடித்த இம்சை அரசன் ‘23-ம் புலிகேசி படம் வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் எடுக்க ஷங்கர் முடிவு செய்தார். வடிவேலுவை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பையும் அரண்மணை அரங்குகள் அமைத்து சென்னையில் தொடங்கினார்கள்.

ஆனால் படத்தின் இயக்குனர் சிம்புதேவனுக்கும் வடிவேலுவுக்கும் மோதல் ஏற்பட்டதால் படம் நின்று போனது. அந்த படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது என்று வடிவேலு மறுத்து விட்டார். இதனால் அவரிடம் நஷ்ட ஈடு கேட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஷங்கர் புகார் செய்தார். இருதரப்பினருக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

நடிகர் சங்கமும் தயாரிப்பாளர்கள் சங்கமும் இம்சை அரசன் படத்தை முடித்துக் கொடுக்கும்படி வடிவேலுவை வற்புறுத்தின. ஆனால் அவர் ஏற்கவில்லை. வேறு படங்களில் நடிக்க ஆயத்தமானார். இதைத்தொடர்ந்து வடிவேலு படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்ததாக தகவல் வெளியானது. இதனால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள்.

இந்த நிலையில் ஷங்கருக்கும் வடிவேலுக்கும் இப்போது சமரசம் ஏற்பட்டு உள்ளதாகவும் மீண்டும் இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிக்க வடிவேலு சம்மதித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் வடிவேலுக்கு எதிரான தடையை நீக்குவது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்