அமெரிக்க இணையதளத்தில் பிரியங்கா சோப்ரா திருமணம் பற்றி அவதூறு

தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் நடித்து பிரபல இந்தி கதாநாயகியாக உயர்ந்த பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்காவில் புகழ் பெற்ற பாப் பாடகராக இருக்கும் நிக் ஜோனாசுக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். ஜோத்பூர் அரண்மனையில் திருமணம் நடந்தது.

Update: 2018-12-07 22:39 GMT
திருமணத்தில் பட்டாசுகள் வெடித்ததாகவும் யானை, குதிரைகளை துன்புறுத்தியதாகவும் சர்ச்சைகள்ஷ் கிளம்பின. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பிரபலமான இணையதளம் ஒன்றிலும் பிரியங்கா சோப்ரா திருமணத்தை அவதூறு செய்து கட்டுரை வெளியாகி இருக்கிறது.

அதில் “ பிரியங்கா சோப்ரா ஒரு ஏமாற்றுக்காரர். நிக் ஜோனாசை அவரது விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளார். பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் இடையிலான காதல் உண்மையானது இல்லை. ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்துவதால் அமெரிக்க பாடகரை அவர் திருமணம் செய்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

நிக் ஜோனாசின் சகோதரரை திருமணம் செய்யப்போகும் ஹாலிவுட் நடிகை சோபி டர்னர் இந்த கட்டுரையை தனது டுவிட்டரில் கண்டித்தார். இந்தி நடிகை சோனம் கபூரும் அந்த இணையதளம் மீது சாடி உள்ளார். இதுகுறித்து பிரியங்கா சோப்ராவிடம் கேட்டபோது, “இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. இதுபோன்ற முறையற்ற விஷங்கள் எதுவும் என்னை பாதிக்காது. இந்த தருணத்தில் நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன்”. என்றார்.

எதிர்ப்புகள் கிளம்பியதால் அந்த கட்டுரையை அமெரிக்க இணையதளம் நீக்கிவிட்டது.

மேலும் செய்திகள்