‘மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன் – நடிகை சுருதி ஹரிகரன்

நடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை சுருதி ஹரிகரன் ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறினார்.

Update: 2018-12-12 23:30 GMT
2015–ல் நிபுணன் மற்றும் விஷ்வமய பெயர்களில் தமிழ், கன்னடத்தில் வெளியான படத்தின் படப்பிடிப்பில் அத்துமீறி கட்டிப்பிடித்து விரல்களால் உடலை தடவியதாக அவர் குற்றம் சாட்டினார். இதை அர்ஜுன் மறுத்தார். மான நஷ்ட வழக்கும் தொடர்ந்தார். 

அர்ஜுன் மீது கப்பன் பார்க் போலீசில் சுருதி ஹரிகரன் அளித்த புகாரில் ஓட்டலில் தன்னிடம் அத்து மீறி நடந்ததாகவும் ரிசார்ட்டுக்கு வரும்படி அழைத்ததாகவும் கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாக அர்ஜுன் மீது பாலியல் துன்புறுத்தல், மிரட்டல், அவதூறு, பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த நிலையில் ‘மீ டூ’ புகார் சொன்ன சுருதிஹரிகரனுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. டைரக்டர்களும் தயாரிப்பாளர்களும் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள். இதனால் பட உலகில் மளமளவென வளர்ந்த அவர் இப்போது வருமானம் இல்லாமல் வீட்டில் சும்மா இருக்கிறார் என்கின்றனர்.

இதுகுறித்து சுருதிஹரிகரன் கூறும்போது, ‘‘நான் மீ டூவில் பாலியல் புகார் கூறியதற்கு முன்னால் வாரத்துக்கு 3 படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் புகார் சொன்ன பிறகு யாரும் வரவில்லை. பட வாய்ப்புகள் முழுமையாக நின்று விட்டன.’’ என்றார்

மேலும் செய்திகள்