ரெயிலை பிடிக்க ஓடிய விஜய்தேவரகொண்டா காயம்
படப்பிடிப்பில் ரெயிலை பிடிக்க ஓடிய விஜய்தேவரகொண்டா காயம் அடைந்தார்.
தெலுங்கு பட உலகில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக உயர்ந்தவர் விஜய்தேவரகொண்டா. இவர் நடித்து திரைக்கு வந்த அர்ஜுன்ரெட்டி படம் ஆந்திர ரசிகர்களை உலுக்கியது. வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இந்த படம் விக்ரம் மகன் நடிக்க பாலா இயக்கத்தில் வர்மா என்ற பெயரில் தமிழில் தயாராகிறது.
மேலும் நோட்டா என்ற நேரடி தமிழ் படத்திலும் நடித்தார். இந்த படம் சரியாக ஓடவில்லை. பெல்லி சூப்பலூ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது ‘டியர் காம்ரேட்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு காக்கிநாடாவில் நடந்து வருகிறது. ஓடும் ரெயிலின் பின்னால் ஓடுவதுபோல் காட்சியை எடுத்தனர்.
இதற்காக விஜய் தேவரகொண்டா ரெயில் பின்னால் ஓடிச்சென்று பிடிக்க முயன்றார். அப்போது திடீரென்று நிலைதடுமாறி கீழே விழுந்தார். பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்துக்குள் சரியப்போன அவரை பக்கத்தில் நின்றவர் ரெயிலில் சிக்காதவாறு பிடித்து இழுத்து காப்பாற்றினார்.
இதைப் பார்த்த படக்குழுவினர் சில நொடிகள் அதிர்ச்சியானார்கள். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியதை நினைத்து நிம்மதியானார்கள். இந்த விபத்தில் விஜய் தேவரகொண்டாவின் கையில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். கையில் ஏற்பட்ட காயத்தை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.