நக்சலைட் வேடத்தில், சாய்பல்லவி

தெலுங்கு படமொன்றில் நடிகை சாய்பல்லவி நக்சலைட்டாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-12-19 22:30 GMT
மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சாய்பல்லவி. அவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. அதன்பிறகு தமிழ், தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்தன. கதாநாயகிக்கு முக்கியத்துவமான கதைகளை தேர்வு செய்து நடித்தார். தமிழில் தியா படத்தில் குழந்தைக்கு தாயாக வந்தார்.

அதன்பிறகு தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் ஆட்டோ டிரைவர் வேடம். இந்த படம் திரைக்கு வருகிறது. தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் என்.ஜி.கே. படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பும் இறுதிகட்டத்தில் உள்ளது. தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

சாய்பல்லவி படப்பிடிப்புகளில் கடுமையாக நடந்துகொள்வதாக தெலுங்கு நடிகர் நாகசவுரியா குறை கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தெலுங்கு படமொன்றில் சாய்பல்லவி நக்சலைட்டாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கதாநாயகனாக ராணா நடிக்கிறார்.

போலீஸ் அதிகாரிக்கும், பெண் நக்சலைட்டுக்கும் மலரும் காதலை மையப்படுத்தி எடுக்கின்றனர். அதிரடி சண்டை காட்சிகளும், அரசியலும் படத்தில் உள்ளன. நக்சலைட்டாக நடிப்பதற்கு விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. கதாநாயகியாக வளர்ந்து வரும் நிலையில் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதை சக நடிகைகளும், ரசிகர்களும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டாராம். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

மேலும் செய்திகள்