சங்க அலுவலகத்தை பூட்டியவர்கள் மீது நடவடிக்கை 29 பேருக்கு பட அதிபர் சங்கம் நோட்டீஸ்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு எதிராக அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த பட அதிபர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2019-01-03 22:44 GMT
சென்னை தியாகராயநகரில் இயங்கும் சங்க அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். அலுவலகத்துக்கு பூட்டு போட்டும் பூட்டினார்கள்.

மறுநாள் பூட்டை உடைக்க முயன்ற விஷாலை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் கோர்ட்டு உத்தரவின்படி அதிகாரிகள் பூட்டை திறந்து அலுவலகத்தை விஷால் தரப்பினரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழுவை கூட்டி விவாதித்து சங்க அலுவலகத்தை பூட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. உறுப்பினர் அல்லாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தனர்.

அதன்படி சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டதாக 29 உறுப்பினர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விதியை மீறி சங்க அலுவலகத்தை பூட்டியதற்கு 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீசில் குறிப்படப்பட்டு உள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-

ராதாகிருஷ்ணன், ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர், கே.ராஜன், டி.சிவா, வடிவேல், சுரேஷ் காமாட்சி, தனஞ்செயன், விஜயகுமார், பழனிவேல், ஷக்தி சிதம்பரம், ஜான்மேக்ஸ், அடிதடி முருகன், விடியல்ராஜ், திருமலை, பஞ்ச் பரத், சுப்பையா, ஜோதி, சவுந்தர்ராஜன், பாபுகணேஷ், அஷோக், பி.ஜி.பாலாஜி, குண்டு முருகன், அஸ்லாம், சீனிவாசன், மீரா கதிரவன், தமிழரசன், கணபதி, சாலை சகாதேவன்.

மேலும் செய்திகள்