நடிகை மீது திராவகம் வீசுவதாக மிரட்டல்

நடிகை தீபிகா காகர் மீது திராவகம் வீசுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

Update: 2019-01-06 22:30 GMT

டெலிவிஷனில் இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு உள்ளது. முன்னணி நடிகர்-நடிகைகள் இதில் வருகிறார்கள். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12-வது சீசன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இதில் பிரபல டி.வி நடிகை தீபிகா காகர் வெற்றி பெற்றுள்ளார்.

பலரும் ஸ்ரீசாந்த் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. தீபிகா காகரை சதிசெய்து ஜெயிக்க வைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர். ஸ்ரீசாந்த் ரசிகர்கள் தீபிகாவை சமூக வலைத்தளங்களில் கடுமையாக திட்டி வருகிறார்கள்.

தன்னை ஸ்ரீசாந்தின் தீவிர ரசிகர்கள் என்று கூறிக்கொண்ட ரசிகர் ஒருவர் டுவிட்டரில் தீபிகாவை திட்டியதோடு விடாமல் அவர் மீது திராவகம் வீசப்போவதாக மிரட்டல் விடுத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தனது டுவிட்டர் கணக்கையே அவர் நீக்கி விட்டார். ஆனாலும் அதை படம் எடுத்து பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

தீபிகா மீது திராவகம் வீசுவதாக மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மும்பை போலீசாருக்கு கோரிக்கை விடுத்தும் பதிவிட்டு வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்