திருமணம் செய்து கொள்ளாமல் ஆரவ்வுடன் சேர்ந்து வாழ்கிறேனா? - நடிகை ஓவியா விளக்கம்

திருமணம் செய்து கொள்ளாமல் ஆரவ்வுடன் சேர்ந்து வாழ்கிறார்கள் என்ற தகவலுக்கு நடிகை ஓவியா விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2019-01-06 23:30 GMT

‘களவாணி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஓவியா. மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே, காஞ்சனா-3 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். இதே நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்ற நடிகர் ஆரவ்வுடன் காதல் வயப்பட்டார்.

ஆனால் ஆரவ்வோ ஓவியாவை காதலிக்கவில்லை என்று மறுத்தார். இதனால் காதல் தோல்வியில் ஓவியா பிக்பாஸ் அரங்கில் நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தியதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்காமல் ஓவியா வெளியேறினார்.

இந்த நிலையில் சில வாரங்களாக ஆரவ்வும் ஓவியாவும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். புத்தாண்டையொட்டியும் நெருக்கமாக செல்பி எடுத்து வெளியிட்டுள்ளனர். இதனால் இருவருக்கும் மீண்டும் காதல் ஏற்பட்டு உள்ளதாகவும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்கிறார்கள் என்றும் தகவல் பரவியது.

இதற்கு ஓவியா பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “பிக்பாஸ் நிகழ்ச்சியில் எனக்கும் ஆரவ்வுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தது. இப்போது சமாதானமாகி விட்டோம். நானும் ஆரவ்வும் திருமணம் செய்து கொண்டோம் என்றும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறோம் என்றும் தகவல்கள் பரவுகின்றன. அதில் உண்மையில்லை. அப்படி ஏதாவது இருந்தால் நாங்களே சொல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்